சிறு வயது முதல் பல்வேறு சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வளர்ந்ததாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதனால் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது தாம் உற்சாகமாக உணர்வதாகவும் அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமது திரையுலகத் தோழிகளுடன் அண்மையில் ஐரோப்பாவுக்குச் சென்று விடுமுறையைக் கொண்டாடி மகிழ்ந்த ஐஸ்வர்யா, அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற விடுமுறைகள் அவசியமானவை என்றும் இவ்வாறு பல இடங்களுக்குச் சென்று வந்தால்தான் மனதில் புத்துணர்ச்சியும் புதிய சவால்களை எதிர்கொள்வதற்கான ஆர்வமும் அதிகரிக்கும் என்று அறிவுறுத்துகிறார்.
"இதுபோன்ற ஒரு வாழ்க்கையை நான் கற்பனை செய்துகூட பார்த்ததில்லை. சிறு வயதில் கஷ்டங்களைத் தவிர வேறு எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. குடும்ப கஷ்டத்தை முழுமையாக அனுபவித்தேன். அதனால்தான் இன்று வெற்றி, தோல்விகள் என்னைப் பாதிப்பதில்லை. பணத்தின் மீதான ஆசையும் இல்லை.
"என் பெயரில் இருக்கும் செல்வம் (ஐஸ்வர்யம்) வாழ்க்கையில் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால், இதற்காக நான் கவலைப்படுவதில்லை," என்கிறார் ஐஸ்வர்யா.
தமக்கு எட்டு வயதானபோது தந்தையின் அன்பை இழந்துவிட்டதாகக் குறிப்பிடுபவர், ஒரு சாலை விபத்தில் உடன்பிறந்த அண்ணன்கள் இருவரையும் பறிகொடுத்துவிட்டதாகக் கண்கலங்குகிறார்.
"வாழ்க்கை என்பது நமக்கு அன்றாடம் புதுப்புது பாடங்களைக் கற்றுக்கொடுத்த வண்ணம் உள்ளது. அவற்றைப் படித்துத்தான் ஆகவேண்டும். இல்லையெனில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்க இயலாது.
"திரைத்துறைக்கு வந்த புதிதிலும் சரி, அதற்கு முன்பும் சரி, நிறைய போராட்டங்களைச் சந்தித்துள்ளேன். அடிமேல் அடி என்பார்களே, அது எனக்கு நன்றாகப் பொருந்தும். வெற்றி, தோல்விகள் குறித்து நான் கவலைப்படாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்," என்கிறார் ஐஸ்வர்யா.
பெரிய கதாநாயகி என்ற பெயர் வேண்டும், முதல் இடத்தைப் பிடிக்கவேண்டும் என்றெல்லாம் தமக்கு எப்போதுமே ஆசை இருந்ததில்லை என்று குறிப்பிடுபவர், நல்ல நடிகை என்று பெயரெடுப்பதே தமது லட்சியம் என்கிறார்.
"எனக்கு இந்த இலக்கு மட்டுமே போதுமானது. நல்ல நடிகை என்ற பாராட்டு கிடைத்த பிறகு அந்தப் பெயரைத் தக்கவைத்துக் கொள்வதும் பெரிய சவாலாக இருக்கும். அதையும் உணர்ந்துதான் எனக்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன்.
"நான் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும் படியாக இருக்கவேண்டும். இதுதான் என்னுடைய முக்கியமான எதிர்பார்ப்பு, ஆசை. சம்பளம், பாராட்டு ஆகியவை எல்லாம் அதற்குப் பிறகுதான்," என்கிறார் ஐஸ்வர்யா.
திரையுலகில் தமக்கான மரியாதை கிடைப்பதற்காக கடுமையாக உழைத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், நீண்ட போராட்டத்துக்குப் பிறகே அதைச் சாதிக்க முடிந்தது என்கிறார். தொடக்க காலத்தில் படப்பிடிப்பில் பங்கேற்கும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீரைக் கூட குடிக்கமாட்டாராம்.
"அனைத்துக்கும் பின்னணியில் ஒரு காரணம் உள்ளது. நான் முன்னணி கதாநாயகி அல்ல என்பதால் எனக்கு ஓய்வெடுக்க கேரவேன் வசதி செய்து தரப்படவில்லை. அதற்காக நான் கவலைப் பட்டதும் இல்லை.
"எனினும் சுயமரியாதையை இழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். முன்னேறிக் காட்ட வேண்டும் என வைராக்கியம் மனதில் நிறைந்திருந்தது. அவமானங்கள் என்னைத் துரத்தியபோது மனம் கலங்கவில்லை," என்கிறார் ஐஸ்வர்யா.
'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் நடிக்கும் போதுதான் இவருக்கு கேரவேன் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று முன்னணி நாயகியாக இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறுகிறார். தற்போது திரைப்்படங்கள் மட்டுமல்லாமல் இணையத் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா, நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் எப்படியாவது கால்ஷீட் பிரச்சினைகளைச் சமாளித்து அதை ஏற்று நடிக்கிறார்.
, :
ஐஸ்வர்யா ராஜேஷ்

