"முழுமையான வெற்றி என்பது அடிக்கடி கிடைத்துவிடாது என்கிறார் நடிகர் கார்த்தி.
எனவே வாய்ப்பு கிடைக்கும்போது ஒரு வெற்றியை இயன்ற அளவுக்கு பெரிதாகக் கொண்டாடிவிட வேண்டும் என 'விருமன்' படத்தின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வில் அவர் பேசினார்.
"இந்த வெற்றி ஒரு பெரிய குடும்பத்தின் வெற்றி. இயக்குநர் முத்தையா எப்போதுமே கண்ணீருடன்தான் கதை சொல்வார். விட்டுக் கொடுத்துப் போவதில்தான் குடும்பத்தின் அழகே இருக்கிறது.
"கூட்டுக்குடும்பமாக வாழ மிகப்பெரிய சகிப்புத்தன்மை தேவை. நம்மைவிட மற்றவர்கள் முக்கியம் எனக் கருத வேண்டும். இந்தப்படம் கிராமத்தில் ஓடும், எனினும் நகரத்தில் சந்தேகம்தான் என்றார்கள். ஆனால், நகரத்தில் நான் கேட்டே என் படத்தை திரையரங்கில் காண நுழைவுச்சீட்டு கிடைக்கவில்லை. குடும்பங்களின் தியாகத்தால்தான் நாங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து வேலை செய்ய முடிகிறது," என்றார் கார்த்தி.
இதையடுத்து பேசிய நடிகர் சூர்யா, ஒரு பெண் வெற்றிபெற பத்து மடங்கு போராட வேண்டிஉள்ளது என்றார்.
குடும்பத்துக்காக ஒரு பெண் வீட்டில் இருந்தபடி உழைப்பது மிகப்பெரிய தியாகம் என்று அவர் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார்.
"எனக்கும் கார்த்திக்கும் பின்னால் இருக்கும் மிகப்பெரிய பலம் எங்கள் வீட்டுப்பெண்கள்தான். அவர்களின் தியாகம் மிகப்பெரியது.
"ஓர் ஆண்மகன் இங்கே வெற்றி பெறுவது எளிது. ஆனால், ஒரு பெண் வெற்றிபெற பத்து மடங்கு போராட வேண்டியிருக்கிறது. வீட்டில் இருக்கும் ஆண் மகனை முன்னிறுத்தி பின்னால் நிற்கிறார்கள் பெண்கள்.
"என் தங்கை சொன்னதுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. 'எங்களுக்கு சொர்க்கம் எதுவென்றால், நாங்கள் சாப்பிட்ட தட்டை இன்னொருவர் கழுவுவதுதான்' என்று அவர் குறிப்பிட்டபோது பல விஷயங்கள் எனக்குப் புரிந்துள்ளன.
"நம் வீட்டுப் பெண்களை மட்டு மல்லாம், நம்மைச் சுற்றியுள்ள அனைத்துப் பெண்களையும் ஒவ்வொரு முறையும் முன்னிறுத்தி அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்," என்றார் சூர்யா.
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'விருமன்'. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். அதிதி சங்கர் நாயகியாக அறிமுகமாக இந்தப் படம் வெளியீடு கண்ட ஐந்து நாள்களில் முப்பது கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளது.

