ஒரு திரைப்படத்தில் ஒன்றிரண்டு 'ஃபிளாஷ் பேக்' காட்சிகள் இடம்பெறுவது இயல்பு. ஆனால் நாற்பது 'ஃபிளாஷ் பேக்' சம்பவங்கள் இடம்பெற்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 'கொலை' படத்தின் கதையை இவ்வாறு வித்தியாசமாக அமைத்துள்ளார் இயக்குநர் பாலாஜி குமார்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தின் தழுவல்தான் 'கொலை' திரைப்படம் என்றும் தாம் இதுவரை படித்து முடித்துள்ள சுமார் முந்நூறு புத்தகங்கள் ஏற்படுத்திய தாக்கமும் இந்தக் கதையில் இருக்கும் என்றும் சொல்கிறார்.
"இந்தப் படத்தின் நாயகனாக விஜய் ஆண்டனியின் பங்களிப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்தக் கதைக்கு அவர் மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர் சரியான தேர்வாக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
"படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பின்னர் ஒருநாள் அவருடன் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, 'இந்தப் படத்தில்தான் நான் நடித்த மாதிரி தெரிகிறது. ஒருவித மன நிறைவு உள்ளது' என்றார்.
"படத்தின் கதையை அவரிடம் விவரிக்கச் சென்றபோது, இருபது நிமிடங்களுக்குள் முடிந்துவிடுமா என்று கேட்டார். அது கடினம் என்றாலும் முயற்சி செய்வதாகக் கூறி, கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.
"இடைவேளை பகுதி வரும்வரை பொறுமையாகக் கேட்டவர், உடனே தனது கைபேசி மூலம் தயாரிப்பாளரைத் தொடர்புகொண்டு நடிக்க சம்மதம் என்று தெரிவித்தார். பிறகு கதைப்படி யார் கொலைகாரன் என்பதை உடனே தெரிந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.
"அது மட்டுமல்ல, கதையில் மூழ்கிப்போனவராக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். அவருக்காக கதையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அதையும்கூட அவர் வற்புறுத்தவில்லை. நானாக விரும்பிச் செய்தேன்," என்கிறார் பாலாஜி குமார்.
1920, 1930களில் வெளிவந்த புத்தகங்களைத் தேடிப்பிடித்து படித்தாராம். நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கதையைக் கையாள்வது கடினமாக இருந்தது என்கிறார்.
"ராணுவம் சார்ந்த கதைகளை விரும்பிப் படிப்பேன். அதுபோன்ற கதைகளைப் படமாக்குவதும் பிடிக்கும். இதுகுறித்தெல்லாம் விஜய் ஆண்டனியுடன் நிறைய கலந்துரையாட முடிந்தது.
"இந்த 'கொலை' படத்தின் கதைக்கான திரைக்கதையை நாற்பத்து ஐந்து முறை எழுத முயன்று, ஒருவழியாக முடித்தேன். நாற்பது 'ஃபிளாஷ் பேக்' காட்சிகளை ரசிகர்களுக்குப் புரியும் வகையில் எப்படிப் படமாக்குவது என்ற தயக்கமும் பயமும் தொடக்கத்தில் இருந்தது.
"படம் தேவையின்றி நீளமாகிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தினேன். மேலும் குறைந்தபட்சம் மூன்று பாடல்களுக்காவது இடமளிக்க வேண்டியிருக்கும். அதற்கு 12 நிமிடங்கள் தேவை. மற்ற காட்சிகளையும் உள்ளடக்கினால் மூன்று மணி நேரம் கூட தேவைப்படும் என்ற நிலையில் திட்டமிட்டு உழைத்தோம். இறுதியில் இரண்டேகால் மணி நேரப் படமாக உருவாகி உள்ளது 'கொலை' படம்," என்கிறார் பாலாஜி குமார்.
படத்தலைப்புக்கான காரணம்?
"நாம் எல்லாருமே மிக சாதாரணமாக 'கொலை' வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ஆனால், நூறாண்டுகால தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படம்கூட 'கொலை' என்ற தலைப்பில் வெளிவந்ததில்லை. இது யாரும் தொடாத தலைப்பு. எப்படி இந்த வார்த்தையை யாரும் கவனிக்காமல் விட்டனர் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
"இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்கள்தான் ஒரு படைப்புக்கு ஒருவித முழுமையைக் கொடுக்கும். ஆனால், அந்தச் சின்ன விஷயங்களைச் செய்து முடிப்பது, சாதிப்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது. அப்படிச் சின்னச்சின்ன விஷயங்கள் மூலம் இந்தப் படத்துக்கு சுவாரசியம் சேர்த்துள்ளோம்.
"என்னைப் பொறுத்தவரை நாம் விரும்பும் விதத்தில் படம் எடுக்க வேண்டும். அது மக்கள் மனதைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்ட படமாகவும் அமையும்போது பெரிய வெற்றியைப் பெறும்.
"ஒரு நல்ல படைப் பைத் தர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மனம் முழுவதும் நிறைந்திருக்கும். ஒரு கதையை ஐம்பது முறை சுருக்கியும் நீட்டியும் எழுதுவேன். அப்போதுதான் மனநிறைவு ஏற்படும்.
"விஜய் ஆண்டனி இயக்குநரின் மனதைப் புரிந்துகொண்டு செயல்படும் நாயகன். அதனால் அவருடன் பணிபுரிவது சிறந்த அனுபவமாக இருக்கும்," என்கிறார் பாலாஜி குமார்.
இதற்கிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் விஜய் ஆண்டனி நடிப்பில் மேலும் இரண்டு படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக அவரது தரப்பு தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர்களின் சிரமத்தை உணர்ந்து அவர் தனது சம்பளத்தைக் குறைத்துக்கொள்வதாக அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
, :