பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'நட்சத்திரம் நகர்கிறது' படம். இளையர்களை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்குவதாகச் சொல்கிறார்.
காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், வினுஷா, ஹரி, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனைவருக்குமே உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாம்.
"இது காதல் படம் அல்ல. காதல் பற்றிய படம். ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது அந்த உறவு காதலாகத் தொடங்குகிறது. அந்த உறவு குடும்பத்திற்குத் தெரியும்போது சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது.
"இங்கே காதலுக்கு ஒரு மதிப்பீடு வைத்துள்ளனர். காதல் வர்க்கத்தையும் சாதியையும் பின்னிப் பிணைந்ததாக அந்த மதிப்பீடு இருக்கிறது. காதல் தனிப்பட்ட விஷயமாக இருக்கும்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்போது காதலை அரசியலாக மாற்றி உள்ளனர். அதைப்பற்றி விவாதிக்கும் படம்தான் இது.
"இதில் வெறும் ஆண், பெண் காதல்கள் மட்டுமல்லாமல், ஒரு பாலினக் காதல் குறித்தும் பேசியுள்ளோம். திருநங்கையின் காதலும் இருக்கிறது.
"புதுவையில் நாடகக் குழு ஒன்று காதல் பற்றி ஒரு நாடகம் தயாரிக்க முடிவு செய்கிறது. அந்த நாடகத்தைப் பற்றிய விவாதம் எவ்வாறு நடக்கிறது, அந்த நாடகம் அரங்கேறியதா, இடைப்பட்ட காலத்தில் அந்த நாடாகக் குழுவில் ஏற்படக்கூடிய உணர்வுபூர்வமான பிரச்சினைகள், அக்குழுவில் இருப்பவர்களின் உணர்வுகள், காதல் என பலவற்றை விவாதிக்க முயற்சி செய்துள்ளேன். ஒரு காதலைக் குடும்பமும் சமூகமும் எப்படிப் பார்க்கின்றன என்பதுதான் மையக்கரு," என்கிறார் பா.ரஞ்சித்.
தமது திரைப்பயணத்தில் இதுவரை தாம் எழுதி எடுத்த படங்களில் இருந்து 'நட்சத்திரம் நகர்கிறது' படம் மாறுபட்டதாக இருக்கும் என்று குறிப்பிடுபவர், தமது சினிமா வாழ்க்கையில் இது முக்கிய படைப்பாக இருக்கும் என்கிறார்.
"என் மனதில் ஏற்படக்கூடிய உணர்வுதான் படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்படும். நவீன சினிமாவின் தாக்கத்தில் இந்தக் கதையை எழுதி இருக்கிறேன். நான் எதிர்பார்த்தது போலவே நல்ல படைப்பாக வந்திருக்கிறது.
"கதாநாயகனுக்கு இரண்டு சண்டைக்காட்சிகள் இருக்க வேண்டும், சில பாடல்கள் வேண்டும் என்கிற நிர்ப்பந்தங்களுக்கு இந்தப் படத்தில் இடம்கொடுக்கவில்லை.
"எனது படங்கள் அனைத்தையுமே எளிய மனிதர்களின் மனித மாண்பை மீட்டெடுப்பதற்கான முயற்சியாகவே கருதுகிறேன். இன்றைய மின்னிலக்க உலகில் இளையர்களின் மனப்போக்கு எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
"இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை. அவருடன் ஐந்து படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். எனவே வேறு ஒருவருடன் இணைய வேண்டும் எனத் தோன்றியது. அதனால்தான் டென்மா என்பவருடன் இணைந்துள்ளேன். அவரும் என் எதிர்பார்ப்புக்கேற்ப சிறப்பாக இசையமைத்துள்ளார்," என்கிறார் பா.ரஞ்சித்.