'குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் நேயர்களுக்கு நன்கு அறிமுகமானவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே பப்பு.
அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
"நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் சாரைப் பார்த்தேன். அப்போது கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவோம் என்று சொன்னார். அதுவே மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தனுஷ் என்ற அற்புதமான நடிகரைச் சந்தித்ததும் அவர் எனக்கு வாய்ப்பு தருவதாகக் கூறியதும் எனக்குப் போதுமானதாக இருந்தது.
"இந்நிலையில், திடீரென ஒருநாள் தொலைபேசி அழைப்பு வந்தது. தனுஷ் சார் படத்தில் நீங்களும் இருக்கிறீர்கள் என்று எதிர்முனையில் இருப்பவர் சொன்ன அந்தத் தருணத்தை மறக்கவே இயலாது. அது ஒரு மாயாஜாலம் போன்று தோன்றியது,"
"எனக்கான கதாபாத்திரம் என்ன, அதற்கு எப்படித் தயாராவது என்று எதையுமே கேட்டுக்கொள்ளவில்லை. பிறகு நித்யா மேனன் தம்பியாக நடிப்பது தெரியவந்தது.
"படத்துக்குப் பூசை போட்ட பிறகு, தனுஷும் இயக்குநரும் ஏதோ முக்கியமான காட்சி குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது என்னைப் பார்த்தபடியே இருவரும் பேசியதும், என்னவாக இருக்கும் என்ற யோசனை மனதில் அதிகரித்தபடியே இருந்தது.
படப்பிடிப்பு தொடங்கியதும், குறிப்பிட்ட ஒரு முக்கியமான காட்சிக்கான வசனங்களை என்னிடம் தந்தனர். அதைப் படித்தபோது மயக்கம் வராத குறைதான். இது போதாதென்று இருவரும் சேர்ந்து ஒரு நிபந்தனையும் விதித்தனர்.
"அந்தக் காட்சியில் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, தனுஷ் என முக்கிய நடிகர்கள் இருப்பார்கள். ஆனால், அவர்களில் யாருக்குமே வசனம் இல்லை. நான் மட்டும்தான் பேச வேண்டும். அதுவும் ஒரே மூச்சாகப் பேசிவிட வேண்டும் என்று இருவரும் கூறினர்.
"முதலில் பயந்தாலும் பிறகு ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நம்பிக்கையோடு வசனங்களை மனப்பாடம் செய்தேன். ஒரே டேக்கில் அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. தனுஷ் மிகவும் பாராட்டினார்.
"படத்தின் இறுதிக்காட்சியை திரையரங்கில் பார்த்தபோது அழுதுவிட்டேன். இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும் எனக் கனவில்கூட நினைக்கவில்லை.
"நித்யா மேனன் பாசமாக நடந்துகொண்டார். அவருக்கு உடன்பிறந்த தம்பி இல்லை என்பதால் என்னைத் தம்பியாக நினைப்பதாகக் கூறினார். 'ஓ காதல் கண்மணி' படம் பார்த்தபின்னர், அவர் எனது கனவு நாயகியாக இருந்தார். இப்போது அக்காவாக மாறிவிட்டார்.
"நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை தனுஷ் நிறைவேற்றி உள்ளார். என்னைப் போன்றவர்களை உற்சாகப்படுத்தி வாய்ப்பு தரும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்," என்கிறார் 'விஜே' பப்பு.

