சில ஆண்டுகளுக்கு முன்பு 'பனி விழும் இரவு' என்ற தலைப்பில் சொல்லப்பட்ட கதை இப்போது 'டைரி' என்ற திரைப்படமாக உருவாகி உள்ளது. நாயகனாக நடித்திருப்பவர் அருள்நிதி.
கதைப்படி படத்தில் ஒரு 'டைரி'யையும் முக்கிய கதாபாத்திரமாக சித்திரித்துள்ளனர். அதனால்தான் இந்தத் தலைப்பையும் தேர்ந்தெடுத்தனராம்.
அடிதடி, திகில், புலனாய்வு, காதல் எனப் பல்வேறு அம்சங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
"ஒருநாள் முக்கியமான செய்திகளை நாளேடுகளில் படித்துக்கொண்டிருந்தோம். அப்போது மனத்தில் உருவான கதை இது.
"என்ன மாதிரியான செய்தி என்பதைச் சொல்ல இயலாது. அதுதான் கதையின் மையக்கரு," என்கிறார் அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன்.
இவர், 'ஈரம்' பட இயக்குநர் அறிவழகன், 'கோப்ரா' பட இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
'ஆறாது சினம்' படத்தில் பணியாற்றியபோதே இவருக்கும் அருள்நிதிக்கும் நட்பு மலர்ந்துள்ளது.
எனினும் பின்னாள்களில் அருள்நிதியை வைத்து தாமே ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு அமையும் எனக் கனவில்கூட நினைத்ததில்லை என்கிறார்.
"அவருடனான நட்பு எனக்கு மிகப்பெரிய பலம். எனது முதல் படத்துக்கான கதையை பல நடிகர்களிடம் சொல்லி இருக்கிறேன். ஆனாலும் அடுத்த கட்டத்துக்கு நகர முடியவில்லை. பின்னர் 'கோப்ரா' பட வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது அதன் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், அருள்நிதி கதை கேட்கத் தயாராக இருப்பதாகவும் அதற்குத் தயாரா என்றும் கேட்டார். உடனே தயார் என்றேன். அருள்நிதியை சந்திப்பதற்குள் அவருக்கேற்ற மாதிரி கதையில் சில மாற்றங்களைச் செய்தேன்.
"அவரைச் சந்தித்தபோது கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கதை சொல்லி இருப்பேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. தனக்குப் படத்தில் இத்தனை காட்சிகள் வேண்டும், காதல் பாடல்கள், சண்டைக்காட்சிகள் தேவை என்றெல்லாம் அவர் தரப்பில் இருந்து எந்த கோரிக்கையும் வராது. நல்ல கதையில் தாம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது எதிர்பார்ப்பு. கதைகளைத் தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர். இப்படிப்பட்ட நாயகர்களை அதிகம் பார்க்க முடியாது.
"அருள் தொடர்ந்து திகில் கதையில் நடிக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் அதுபோன்ற கதைகளில் நடிக்க அவரைவிட நல்ல தேர்வு இல்லை என்பதுதான் பதில். இந்தக் காரணத்தினால்தான் அவருக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உருவானது எனலாம்.
"பலவிதமாக யோசிக்காமல் புது இயக்குநர்களுடைய கதையை நம்பி களமிறங்குவது சாதாரணமல்ல. அதற்கு தனித்துணிவு வேண்டும். 'முதல் படம், முதல் கதை என்று வரும் அறிமுக இயக்குநர்களிடம் ஒருவித பொறி இருக்கும். அதை நான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அவர்களையும் அந்தக் கதைகளையும் நம்பி நடிக்கலாம் என்று ஒருமுறை என்னிடம் சொன்னார். அவர் திட்டமிட்டு தன் எல்லைகளைப் புரிந்துகொண்டு கதைகளைத் தேர்வு செய்வதைப் புரிந்துகொண்டேன்," என்கிறார் இன்னாசி.
'டைரி' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியீடு கண்டது. கமல், விக்ரம், இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோர் இணைந்து அதை வெளியிட்டனர். இதை தாம் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை என்கிறார் இன்னாசி.
"திரையுலகில் பெரிதாகச் சாதித்தவர்கள் இந்த அளவுக்கு எளிமையாக நடந்துகொள்வது அவர்களுடைய பெருந்தன்மை என்பேன். இந்த மகிழ்ச்சியில் இருந்து மீள்வதற்குள், 'டைரி' படத்தை ரெட் ஜயன்ட் நிறுவனம் வெளியிட முன்வந்துள்ளது. இப்போதே பாதி வெற்றி கிடைத்துவிட்டதாக உணர்கிறேன்," என்கிறார் அருள்நிதி.

