சிம்புவை வைத்து தாம் இயக்கும் படத்துக்கு முதலில் 'நதிகளில் நீராடும் சூரியன்' என்பதுதான் இயக்குநர் கௌதம் மேனன் தேர்வு செய்து வைத்திருந்த தலைப்பு. ஆனால் பிறகு அது 'வெந்து தணிந்தது காடு' என்று மாற்றப்பட்டது.
மும்பை, நிழல் உலகம், குண்டர் கும்பல் உள்ளிட்ட விஷயங்களை உள்ளடக்கிய படைப்பாக இந்தப் படம் உருவாகி உள்ளது.
எழுத்தாளர் ஜெயமோகன் மூன்றே நாள்களில் சுமார் நூறு பக்கங்களுக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்துள்ளாராம். அதைப் படித்துப்பார்த்த சிம்புவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் மனநிறைவுடன் சம்மதிக்க, பட வேலைகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, இப்போது திரைகாண்கிறது 'வெந்து தணிந்தது காடு'.
"சிம்புவிடம் உள்ள சிறப்பம்சம் எதற்கும் வளைந்துகொடுக்கும் தன்மை உள்ளவர். ஒரு படைப்பாளியால் அவரை வைத்து எதுவும் செய்ய முடியும். சிம்பு ஒரு படத்தில் இருந்தால் எதுவும் சாத்தியமாகும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
"இந்தி நடிகர் அமீர்கான் திடீரென ஒரு படத்தில் 19 வயது இளையராக திரையில் தோன்றினார். சிம்புவும்கூட அதேபோன்று செய்துள்ளார். அவர் இன்னும் இளையர்தான்.
"19 வயது முத்துவீரன் கதாபாத்திரத்தை அவரிடம் விவரித்ததும் உடனே கேரளாவுக்குப் புறப்பட்டுவிட்டார். அங்கிருந்து திரும்பி வந்தபோது ஆளே மாறிப்போய்விட்டார். சிம்புவுக்குப் பதிலாக முத்துவீரன்தான் என் கண்களுக்குத் தெரிந்தான்.
"அவரது இளவயது தோற்றத்தையும் நடிப்பையும் படக்குழுவில் இருந்த ஒவ்வொருவரும் வெகுவாக ரசித்தோம். எத்தகைய காட்சியாக இருந்தாலும் அதை நன்கு உள்வாங்கிக்கொண்டு ஒரே மூச்சில் பேசி முடிப்பது அவருக்கு கைவந்த கலை," என்று பட நாயகனைப் பாராட்டித் தீர்க்கிறார் கௌதம் மேனன்.
ஜெயமோகன் எழுதிக்கொடுத்த திரைக்கதையில் காதலுக்கு இடம் கொடுக்கவில்லையாம். அதனால் தாமே காதலுக்கான பகுதியை சேர்த்துக் கொண்டதாகவும் இதுவரை தமது படங்களில் பார்த்திராத காதலை இதில் காண முடியும் என்றும் கௌதம் மேனன் உறுதி அளிக்கிறார்.
இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பவர் சித்தி இத்னானி. பாவை என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்துள்ளதாகப் படக்குழுவினர் பாராட்டுகின்றனர்.
"சித்தி இத்னானியைச் சந்திப்பதற்கு முன்பு வேறு சில நடிகைகளை பரிசீலித்தோம். யாரும் பொருத்தமாக இல்லை. அதனால் வேறு வழியின்றி ஒரு நாயகியை ஒப்பந்தம் செய்து, ஒரு படப்பிடிப்பையும்கூட நடத்திவிட்டோம்.
"இந்நிலையில் அவர் நேரில் வந்து சந்தித்தார். அப்போது காலை 11 மணியாகி இருந்தது. அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார் சித்தி.
"மும்பையைச் சேர்ந்தவர் என்றாலும் நன்றாகத் தமிழ் பேசுகிறார். வசனங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு நடிப்பதைப் பாராட்ட வேண்டும்," என்கிறார் கௌதம் மேனன்.
இது என்ன மாதிரியான கதை?
"இது குண்டர் கும்பலைச் சேர்ந்த ஓர் இளைஞனின் கதை. அவன் எதற்காக அந்தக் குழுவில் இணைகிறான், அதன் பின்னணி என்ன, அவனது வாழ்க்கை எங்கு, எப்படித் தொடங்கியது என்பதை விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி உள்ளோம்.
"நாம் அனைவருமே கிடைத்த வாழ்க்கையை வாழ்கிறோம். அதில் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையும் இருக்கிறது என்பது வெளியே தெரிய வேண்டும். அடிதடி அதிகம் என்றாலும் வன்முறையை மிகைப்படுத்தாமல்தான் காட்சிகளைப் படமாக்கி உள்ளோம்.
"ஒரு கதாநாயகன் என்றால் பத்து பேரை அடிக்கலாம், அவனால் எல்லாம் முடியும் என்று ரசிகர்கள் மனதில் பதிய வைத்துள்ளோம். மக்களும் அதை மனதில் நினைத்தபடித்தான் படம் பார்க்க வருகிறார்கள். கமல் படம் என்றால் திரையில் எதுவும் நடக்கக்கூடும் என நம்புகின்றனர்.
"குறிப்பிட்ட ஒரு காட்சியில், 'நாளைக்கு நாம் உயிரோடு இருப்போமா என்று தெரியவில்லை, இதிலிருந்து வெளியே போய்விடலாமா?' என்று ஒருவன் கேட்பான். அதற்கு மற்றொருவன், 'பெரிய விஷயம் ஏதும் செய்யவில்லை என்றால் போய்விடலாம். ஒருவேளை ஏதாவது பெரிதாக சாதித்தால், இங்கே இருப்பதுதான் 'பாதுகாப்பு' என்பான். இதுதான் இந்தப் படத்தின் கதைச்சுருக்கம்," என்கிறார் கௌதம் மேனன்.

