'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் தம்பி அருள்நிதியை வைத்து இயக்கிய மு.மாறன், இப்போது அண்ணன் உதயநிதியை வைத்து உருவாக்கி வரும் படம் 'கண்ணை நம்பாதே'.
முதல் படம் கொலையை மையமாக வைத்து நகரும் கதைக்களத்தைக் கொண்டது எனில், இரண்டாவது படம் இரண்டே நாள்களில் நடக்கும் கதையை வைத்து உருவாகி உள்ளது.
"கதாநாயகனுக்கு திடீர் பிரச்சினைகள் உருவாகிறது. யாரெல்லாம் அப்பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர், அவற்றில் இருந்து நாயகன் எப்படித் தப்பிக்கிறான் என்கிற வழக்கமான கதையைப் போலத்தான் தோன்றும். ஆனால், எனது திரைக்கதை அடுத்து என்ன நடக்கப் போகிறதோ எனும் கேள்வியை எழுப்பி, பரபரப்பைக் கூட்டும்.
"கதைப்படி, கதாநாயகன் கணினி நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். சில பிரச்சினைகள் அவனைத் தேடி வருகிறது எனில் சிலவற்றை அவனே தேடிச் செல்வான். இந்தக் கதைக்களத்தில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்றெல்லாம் யாரும் இல்லை. சூழ்நிலை அவர்களை எவ்வாறெல்லாம் மாற்றுகிறது என்பதைச் சொல்லி இருக்கிறோம். இந்த விளையாட்டு ரசிக்கும்படியாகவும் திகிலாகவும் இருக்கும்," என்கிறார் இயக்குநர் மு.மாறன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை பூமிகா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளதாகவும் அவரது நடிப்பு ரசிகர்களால் மீண்டும் பேசப்படும் என்றும் உத்தரவாதம் அளிக்கிறார்.
அவரை ஒப்பந்தம் செய்ததுமே 'ரோஜாக்கூட்டம்' பட நாயகன் ஸ்ரீகாந்தின் நினைவு வந்ததாம். அவரையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். பிரசன்னாவும் மனதில் பதியும் பாத்திரத்தை ஏற்றுள்ளார். இப்படிப் பலர் இணைந்ததும் பெரிய படமாக மாறிவிட்டது.
"உதயநிதியை வைத்து என்னுடைய முதல் படத்தை இயக்கிய வேளையில் ஒரு நாள் படப்பிடிப்பின்போது, 'அண்ணனுக்கு (உதயநிதி) ஒரு கதை வைத்திருக்கிறேன்' என்று அருள்நிதியிடம் கூறி இருந்தேன். அவர் அதை மறந்திருப்பார் என்றும் நினைத்திருந்தேன்.
ஆனால், அவர் மறக்காமல் உதயநிதி சாரிடம் தெரிவித்துள்ளார். அவருக்காக நான் தயார் செய்த கதையில் காதல், அரசியல் என இரண்டும் இருக்கும். அப்போது அவர் அரசியலுக்கு வரத் தயாராக இருந்தார். அதனால் அரசியல் கலந்த படத்தில் நடிக்கத் தயங்கினார். பிறகு 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' போன்ற கதையில் நடிக்க விரும்புவதாகவும் கூறினார்.
"அதுபோன்ற கதையும் கைவசம் இருந்தது. அதையும் உடனே விவரித்தேன். அது அவருக்குப் பிடித்துப்போய் தொடங்கியதுதான் 'கண்ணை நம்பாதே' படம்," என்கிறார் மு.மாறன்.
நடிகை ஆத்மிகாதான் இந்தப் படத்தின் கதாநாயகி. தனது கதைக்கு நயன்தாரா, சமந்தா, காஜல் போன்ற பெரிய நாயகிகள் தேவைப்படவில்லை என்பவர், தனது பட நாயகிக்கு அண்டை வீட்டுப் பெண்ணைப் போன்ற ஒரு தோற்றம் இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்ததாகச்சொல்கிறார்.
"ஆத்மிகாவுக்கு அத்தகைய தோறறம் உள்ளது. 'மீசைய முறுக்கு' படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு பிடித்திருந்தது. இந்தப் படத்தில் கார் விற்பனையகத்தில் வேலை பார்க்கும் பெண்ணாக அவர் நடித்துள்ளார். அவருக்கும் உதயநிதிக்குமான பகுதி மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இருவரது உடல்மொழியும் கச்சிதமாகப் பொருந்தின.
"ஆத்மிகாவைப் பொறுத்தவரை எதையும் சொன்ன உடனேயே புரிந்துகொள்வார். இயல்பாக நடிக்கும் அதே வேளையில் தனக்கான காட்சிகளை மெருகேற்றுவதில் கெட்டிக்காரர்," என்கிறார் மாறன்.
சரி, ஆத்மிகா என்ன சொல்கிறார்?
"இயக்குநர் மாறன் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே இப்படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம்.
"உதயநிதி நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடிக்கிறார். அதனால் இந்தப் படத்தில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. இது தரமான படைப்பு," என்கிறார் ஆத்மிகா.
அண்மையில் திரையுலகில் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து மறைமுகமாக டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் ஆத்மிகா. ஆனால் எந்தவித உள்நோக்கத்துடனும் தாம் அவ்வாறு பதிவிடவில்லை என இப்போது விளக்கம் அளித்துள்ளார்.
"இன்றைய தேதியில் தமிழ்த் திரையுலகிலும் சின்னத்திரையிலும் நடிப்பதற்கு போதுமான வாய்ப்பு இல்லை என்று யாரும் புலம்பவோ குறைகூறவோ தேவையில்லை.
திரைப்படம், இணையத் தொடர்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பல வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன," என்கிறார் ஆத்மிகா.
, :

