'கோப்ரா' படப்பிடிப்பின்போது பட நாயகன் விக்ரம் அன்புத்தொல்லை கொடுத்ததாக பட நாயகிகள் மூவரும் தெரிவித்துள்ளனர்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படம் வரும் 31ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. அதில் பட நாயகிகள் ஸ்ரீநிதி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர். அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய மிருணாளினி ரவி, இரவு பகல் பாராமல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது என்றும் விக்ரமின் உழைப்பும் நடிப்பும் படக்குழுவினரை அசர வைத்தது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், விக்ரம் சோர்வின்றி மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
"பல நாள்களுக்கு இரவு முழுவதும் படப்பிடிப்பு நடைபெறும். அப்போதெல்லாம் நான், ஸ்ரீநிதி, மீனாட்சி ஆகிய மூவரும் களைப்பு மிகுதியில் நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கி இருக்கிறோம். ஆனால், விக்ரம் அதைச் செய்ய மாட்டார்.
"நாங்கள் நடிக்க வேண்டிய காட்சி படமாக்கப்பட இருந்தால் அவரே தேடி வந்து, எங்களைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி அழைத்துச்செல்வார். மிகப்பெரிய கதாநாயன் இவ்வாறு எளிமையாக நடந்துகொண்டது வியப்பை அளித்தது," என்றார் மிருணாளினி ரவி.
சில சமயங்களில் படப்பிடிப்பில் தூங்குபவர்களை சில நொடிகளுக்கு காணொளியாகப் பதிவு செய்து, பிறகு அவர்களுக்கு அதை கைபேசியில் காண்பித்து கிண்டல் செய்வாராம் விக்ரம். அதுபோன்ற தருணங்களில் ஒரு இளையரைப் போல அவர் நடந்துகொள்வதைப் பார்க்கும்போது எல்லோருக்குமே உற்சாகம் தொற்றிக்கொள்ளும் என்கிறார்கள் 'கோப்ரா' படக்குழுவில் பணியாற்றியவர்கள்.
"ஒருசிலர் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிடுவார். அலறிப்பிடித்து கண்விழித்துப் பார்த்தால் நமக்கு எதிரே நின்று சிரித்துக்கொண்டிருப்பார்.
"அதே சமயம் படக்குழுவில் உள்ள அனைவரிடமும் அன்பு பாராட்டி, உரிய மரியாதையைக் கொடுக்கும் உயர்ந்த பண்பு விக்ரமிடம் உள்ளது. வேலை பார்க்கும் ஆர்வத்தில் சாப்பிடக்கூட மறந்துவிடுவோம்.
"அப்போதெல்லாம் எனக்கும் ஸ்ரீநிதி, மீனாட்சிக்கும் அவரே உணவுத்தட்டை கையில் ஏந்தி வந்து உடனே சாப்பிடச் சொல்வார்.
"அனைவரிடத்தி லும் இதுபோன்ற அன்பையும் பண்பையும் பார்க்க இயலாது. இந்த அன்புத்தொல்லை நம்மையும் அன்பானவர்களாக மாற்றிவிடுகிறது," என்கிறார் ஸ்ரீநிதி ஷெட்டி.
நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்பை அளவிட முடியாது என்றார்.

