வெற்றி இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். எனினும் கதைத் தேர்வில் கெட்டிக்காரர் என்று பெயர் பெற்றுள்ளார். காரணம், அவர் அடுத்து நடிக்கும் படமும் வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகிறது.
'8 தோட்டாக்கள்', 'ஜீவி' என வெற்றி நடித்துள்ள இரு படங்களுமே விமர்சன ரீதியில் வரவேற்பு பெற்றவை. அண்மைய பேட்டி ஒன்றில், தமது திரையுலக அனுபவங் களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
வெற்றியின் சொந்த ஊர் திருநெல்வேலி. எனினும் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தானாம். பொறியியல் பட்டதாரி.
பிறகு லண்டன் சென்று மேற்படிப்பை மேற்கொண்டவர், தனது குடும்பத்துக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்க இருந்தாராம்.
ஆனால் வெற்றி படிப்பை முடித்து நாடு திரும்பிய வேளையில் கட்டுமானத்துறை தொய்வடைந்து போனதால் சினிமா பக்கம் பார்வையைத் திருப்பி உள்ளார்.
"கட்டுமானத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் சில திட்டங்கள் வைத்திருந்தேன். ஆனால் எதையும் செயல்படுத்த முடியாத நிலை. சிறு வயதில் இருந்தே சினிமா மீதான ஆசை அதிகம். அதனால் என் நண்பர் ஒருவர் மூலம் கூத்துப்பட்டறையில் நடிப்புப்பயிற்சி பெற்றேன்.
"இதுதான் எனது சினிமா பயணத்தின் தொடக்கப்புள்ளி," என்று சொல்லும் வெற்றி, தனது முதல் படத்தை தாமே தயாரித்தார். ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான '8 தோட்டாக்கள்' படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
"கதைதான் மற்ற அனைத்தையும் விட முக்கியம். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பல விஷயங்கள் மாறிவிட்டன.
"இயக்குநர் ஸ்ரீகணேஷ் 'கருவி' என்ற கதையைத்தான் முதலில் என்னிடம் சொன்னார். அதைப் படமாக்குவதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டோம். அப்போதுதான் திடீரென '8 தோட்டாக்கள்' கதையை என்னிடம் விவரித்தார்.
"எனக்கும் கதை பிடித்திருந்தது. அதில் உதவி ஆய்வாளர் வேடத்தில் நடிக்கச் சொன்னபோது நான் தயங்கவே இல்லை. காவல்துறை அதிகாரியாக நான் நடித்ததை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்," என்கிறார் வெற்றி.
அதன்பிறகு காவல்துறை அதிகாரி வேடம் என்று சொல்லி பல வாய்ப்புகள் தேடி வந்தனவாம். ஆனால் வெற்றி எதையும் ஏற்கவில்லை. அடுத்து 'ஜீவி' படத்தின் இரண்டாம் பாகம், 'பிக்பாஸ்' ஷிவானியுடன் இணைந்து 'பம்பர்' என்ற படம், 'தீங்கிரை', 'மெமரீஸ்', 'ரெட் சாண்டல்', 'உல்ஃப்' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் வெற்றி, 'பஞ்சதந்திரம்', 'பம்மல் கே.சம்பந்தம்' போன்ற ஜாலியான படங்களில் நடிக்க விரும்புகிறாராம்.

