நடிகை ரித்திகா சிங் தீவிர உடற்பயிற்சி, குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் அடுத்து நடிக்கும் படத்துக்கு 'பாக்ஸர்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் ரித்திகா குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்கிறார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
"நீண்ட இடைவெளிக்குப் பிறகு குத்துச்சண்டைக் களத்திற்கு வருவது உற்சாகம் அளிக்கிறது. முன்னைவிட அதிகப்படியாக பயிற்சி செய்ய முடிகிறது.
"குத்துச்சண்டை என் வாழ்க்கையோடு கலந்துவிட்ட ஒன்று. நாள் முழுவதும் உடற்பயிற்சி செய்யச் சொன்னாலும் தயக்கம் இல்லாமல் அதைச் செய்வேன். தமிழ் சினிமாவில் எனக்கும் ஓர் இடம் கிடைத்திருப்பதும் ரசிகர்கள் என்னை வாழ்த்துவதும் நான் எதிர்பாராத விஷயங்கள். எனவே, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன்," என்கிறார் ரித்திகா.
திரைப்படங்களில் நடித்த வரை போதும் என்று லண்டனுக்குத் திரும்பிய ஏமி ஜாக்சன், மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார்.
ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்தில் இவர்தான் கதாநாயகி என்று கூறப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன் வெளியான 'மதராசபட்டினம்' படத்தில் நடிக்க ஏமி ஜாக்சனை லண்டனில் இருந்து அழைத்து வந்தார் இயக்குநர் ஏ.எல்.விஜய். அந்தப் படத்தில் நடித்த கையோடு, மீண்டும் லண்டன் செல்வார் என்று கூறப்பட்ட நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்தார் ஏமி.
'தாண்டவம்', 'தெறி', 'தங்கமகன்', 'கெத்து', 'தேவி' உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், ரஜினிக்கு ஜோடியாகவும் '2.0' படத்தில் நடித்தார். பின்னர் லண்டன் திரும்பிய அவர், தன் காதலருடன் நெருக்கமாகி, ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில், ஒரு புதுப்படத்தின் நாயகியாக நடிக்க ஏமி ஜாக்சன் பொருத்தமாக இருப்பார் எனக் கருதுகிறாராம் ஏ.எல்.விஜய். இதையடுத்து, ஏமி ஜாக்சனுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதை அடுத்து, அவர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

