அண்மைக்காலமாக எங்கு திரும்பினாலும் ஓடிடி தளங்கள் குறித்த பேச்சுதான் அதிகம் காதில் விழுகிறது.
தமிழ்த் திரையுலகத்தினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகத்தினரும் ஓடிடி தளங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
தரமான படைப்புகளுக்குப் பாரபட்சம் இன்றி ஆதரவு தருகின்றன ஓடிடி தளங்கள். இணையத்தொடர்கள், குறும்படங்கள் என அனைத்தும் வெளியீடு காண்பது ரசிகர்களுக்கு வசதியாக உள்ளது.
சிறார்கள் முதல் இளையர்கள், பெரியவர்கள் வரை அனைவருக்குமே இத்தளங்கள் தீனி போடுகின்றன.
இவை திரையரங்க வசூலை எல்லாம் மிக விரைவாக பெற்றுவிடுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். படம் வெளியாகும் முன்பே புதுப்படங்களை இத்தளங்கள் முன்கூட்டியே பெருந்தொகைக்கு வாங்கிவிடுகின்றன. இதனால் இயக்குநர்கள், கதாநாயகர்கள், தயாரிப்பாளர் ஆகிய மூன்று தரப்பினருமே ஓடிடி தளங்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கின்றனர்.
"இதனால் நவீன உலகின் மிகப்பெரிய ஓடிடி சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மின்னிலக்கத் தொழில்நுட்பம், விவேக திறன்பேசித் துறைகள் பெரும் வளர்ச்சி கண்டுள்ளன.
"உலகிலேயே இளைய தலைமுறையினரை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் ஓடிடி சந்தையாக இந்தியா முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஒரு திரைப்படத்தை ஒரே சமயத்தில் பல்வேறு மொழிகளில் வெளியிட ஓடிடி தளங்கள் கைகொடுக்கின்றன. ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் வெளியாவதால், வசூல் ரீதியில் தயாரிப்பாளர்கள் லாபமடைகிறார்கள்.
"இவ்வாறு மொழி மாற்றம் செய்யப்படும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மொழி எல்லைகளைத் தாண்டி இந்தப் படங்கள் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.
"அதேசமயம் படம் குறித்த விமர்சனங்கள் இயக்குநர்களிடம் உள்ள நிறை, குறைகளைச் சுட்டிக்காட்டுகின்றன. இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதாக அனுபவ இயக்குநர்களும்கூட வெளிப்படையாகச் சொல்வது ஆச்சரியமளிக்கிறது.
"மொத்தத்தில் ஓடிடி தளங்கள் சீறிப்பாய்கின்றன. இனிவரும் நாள்களில் அவற்றின் வளர்ச்சி பிரமிக்க வைக்கும்," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
இந்தியாவில் சந்தா செலுத்தி ஓடிடி சேவைகளைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021ஆம் ஆண்டில் சுமார் 70 விழுக்காடு அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது.
"இப்போது 110 மில்லியன் இந்தியர்கள், சந்தா செலுத்தி ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகளைப் பார்த்து வருகிறார்கள்.
"இது இந்தியச் சந்தையில் வெறும் 15% மட்டுமே. மீதமுள்ள 85 விழுக்காடு மக்களைக் குறிவைத்து இத்தளங்கள் களத்தில் முழுவீச்சில் இறங்கியிருக்கின்றன என்றும் விவரமறிந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இனி வரும் நாள்களில் சில முன்னணி நாயகர்களும் ஓடிடி தளங்களை சொந்தமாக நிறுவ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆஹா என்ற பெயரில் ஓடிடி நிறுவனம் ஒன்றை தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

