மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தேறியது.
படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் எனப் பெரும்பாலானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக ரஜினியும் கமலும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
கல்கி எழுதியதை படமாக்க விரும்பிய மணிரத்னம்
மணிரத்னம் பேசுகையில், 'பொன்னியின் செல்வன்' என்ற அற்புதமான படைப்பைத் தந்த எழுத்தாளர் கல்கிக்கு நன்றி தெரிவித்தார். மிகப் பிரம்மாண்டமாக இப்படத்தைத் தயாரிக்க முன்வந்த இப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரணுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
"இந்தப் படத்தை 'பாகுபலி' போன்று உருவாக்குவீர்களா என்று சுபாஷ் கேட்டபோது, இல்லை என்றேன். அதேபோல், பத்மாவதி இந்திப்படம் போல் இருக்குமா என்று கேட்டபோதும் அதற்கு வாய்ப்பில்லை என்றேன்.
"அப்படியானால், இந்தப் படம் எந்த மாதிரி இருக்கும் என்று கேட்டார். அப்போது, அமரர் கல்கி எழுதியிருப்பதைப் படமாக்க விரும்புகிறேன் என்றேன். அன்று சொன்னபடியே படம் உருவாகி உள்ளது," என்றார் மணிரத்னம்.
ரஜினிக்கு வாய்ப்பு தர மறுத்துவிட்ட மணிரத்னம்
ரஜினிகாந்த் பேசுகையில், 'பொன்னியின் செல்வன்' படத்தில் தாம் சிறு வேடத்திலாவது நடிப்பதற்கு வாய்ப்பு தர வேண்டும் என்று மணிரத்னத்திடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டதாக கூறினார்.
"ஒருமுறை இந்தக் கதையில் உள்ள பெரிய பழுவேட்டையராக நடிக்க விரும்புவதாக மணிரத்னத்திடம் கூறினேன். ஆனால் அவரோ, 'உங்களுடைய ரசிகர்களிடம் என்னால் திட்டுவாங்க இயலாது. அந்தப் பாத்திரம் உங்களுக்கானது அல்ல' என்று கூறி, வாய்ப்பு தர மறுத்துவிட்டார்.
"இன்னொரு தருணத்தில் பிரபல பத்திரிகை ஒன்றில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாசகர்களின் கேள்விக்குப் பதிலளித்து வந்தார். ஒரு வாசகர் 'பொன்னியின் செல்வன்' படம் இப்பொழுது எடுக்கப்பட்டால், அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்று கேட்டிருந்தார். அதற்கு ஜெயலலிதா, ஒரே வரியில் ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டிருந்தார்.
"அதைக் கேள்விப்பட்டதுடன் மகிழ்ச்சி அடைந்தேன். பிறகுதான் 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். மேலும், அந்தக் கதை படமாகும்போது அதில் நடிக்க வேண்டும் எனும் ஆசையும் ஏற்பட்டது," என்றார் ரஜினிகாந்த்.
ரஜினி காலில் விழுந்து ஆசி பெற்ற விக்ரம்
முன்னதாக, அவர் நிகழ்ச்சி நடக்கும் அரங்குக்குள் வந்தபோது பலத்த கரவொலி எழுந்தது. மேலும், விக்ரம் உள்ளிட்ட சில நடிகர்கள் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
நடிகை ஐஸ்வர்யா ராயைப் பார்த்ததும், ரஜினியே அவர் அருகில் சென்று, மென்மையாக அரவணைத்து நலம் விசாரித்தார்.
ஐஸ்வர்யா ராய்: மணிரத்னம்தான் என் குரு
இந்நிகழ்வில் பேசிய ஐஸ்வர்யா, என்றும் தமக்கு மணிரத்னம்தான் குருநாதர் என்று பணிவுடன் குறிப்பிட்டார்.
'இருவர்' படத்தின் மூலம் அவருடனான திரைப்பயணம் தொடங்கியது என்றும் 'பொன்னியின் செல்வன்' படம் காலத்தைக் கடந்து ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
"ரஜினி, கமல் ஆகியோருடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற கனவு நிறைவேறி உள்ளது," என்றார் ஐஸ்வர்யா.
இப்படத்தின் மற்றொரு நாயகியான திரிஷாவும் இதுபோன்ற பிரம்மாண்ட படைப்பில் இடம்பெற வேண்டும் என்ற கனவு நனவாகி உள்ளது என்றார்.
"இந்த நிகழ்ச்சியின் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் அனைவரையும் பாருங்கள். என் கண்ணே பட்டுவிடும்போல் இருக்கிறது," என்றார் திரிஷா.
கமல்ஹாசன்: மணிரத்னத்துக்கும் எனக்கும் இடையே போட்டி நிலவியது
'பொன்னியின் செல்வன்' கதையை யார் முதலில் படமாக்குவது என்பது தொடர்பாக தமக்கும் மணிரத்னத்துக்கும் இடையே ஒருவிதப் போட்டி நிலவியதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
"இந்தக் கதையின் உரிமையைக் காலஞ்சென்ற முதல்வர் எம்ஜிஆர் வாங்கியிருந்தார். அவரைச் சந்தித்தபோது என்னிடம் அந்த உரிமையை ஒப்படைத்து விரைவில் திரைப்படமாக எடுத்துவிடுமாறு அறிவுறுத்தினார். ஏன் அப்படிச் சொன்னார் என்று அப்போது புரியவில்லை.
"அதன் பிறகு மேலும் பலருக்கு அதே எண்ணம் வந்துவிட்டது. நானும் முயற்சி செய்தேன், முடியவில்லை. மணிரத்னம் சாதித்துவிட்டார்.
"ஒருமுறை சிவாஜி கணேசனைச் சந்தித்தபோது வந்திய தேவன் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தேன். எனக்கு என்ன கதாபாத்திரம் என்று நடிகர் திலகத்திடம் கேட்டபோது, அருண்மொழி வர்மன் வேடத்தில் நடிக்கச் சொன்னார்.
"அது நடக்காமல் போனது. இன்று ரஜினி ஏற்க நினைத்த வேடத்தில் கார்த்தியும் எனக்காகத் தேர்வு செய்த பாத்திரத்தில் ஜெயம்ரவியும் நடித்துள்ளனர்.
"ஏ.ஆர்.ரகுமானின் ஒவ்வொரு பாடலும் எனது இதயத் துடிப்பை அதிகரிக்க வைத்தது," என்றார் கமல்ஹாசன்.
ஜெயம் ரவி: நாயகர்களுக்குள் போட்டி நிலவியது உண்மை
'பொன்னியின் செல்வன்' படத்தில் கதாநாயகர்களுக்குள் போட்டி இருந்தது உண்மை என்று வெளிப்படையாகப் பேசினார் ஜெயம் ரவி. மற்ற படங்களுக்கும் மணிரத்னம் படத்துக்கும் உள்ள வித்தியாசத்தை தம்மால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது என்றார் அவர்.
"மற்ற படங்களில் வசனத்துக்கு முக்கியத்துவம் இருக்கும். மணிரத்னம் படத்தில் வசனத்தை விட, உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகர்களுக்குள் போட்டி இருந்தது. ஆனால் அது நல்ல எண்ணத்துடன் உருவான போட்டி.
"படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்குப் போன பிறகும், 'நீ ஏற்று நடிக்கும் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தை மறந்துவிடாதே. உன் நடை, உடை, பேச்சு என அனைத்திலும் ராஜராஜ சோழன் இருக்க வேண்டும்' என்று மணிரத்னம் அறிவுரை வழங்கினார். படம் முடியும் வரை அதைப் பின்பற்றினேன்," என்றார் ஜெயம் ரவி.
கார்த்தி: மொத்த திரையுலகையும் இப்படத்தில் காணலாம்
மொத்த தமிழ் திரையுலகத்தையும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் பார்க்க முடியும் என்றார் நடிகர் கார்த்தி.
இந்தப் படத்தில் எல்லா கதாபாத்திரங்களுமே முக்கியமானவை என்றும் அவை அனைத்துமே மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு தருணம் வந்துள்ளது. இந்தப் படத்தில் நானும் ஓர் அங்கமாக இருப்பது பெருமை அளிக்கிறது," என்றார் கார்த்தி.
ரகுமான் அனுபவம்
இப்படத்தின் பாடல்களுக்குத் தாம் இசையமைத்த பின்னர், ஒரு மாதத்துக்குப் பிறகு அவற்றுக்கு மணிரத்னம் ஒப்புதல் அளித்ததாக ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
இந்தப் பாடல்களுக்காக தாம் பார்த்துப் பார்த்து இசை அமைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
"சில விஷயங்களை மனதில் கற்பனை செய்துகொண்டு தமிழ், தென்னிந்திய கலாசாரத்தை நினைத்து இசையமைத்தேன்," என்றார் ரகுமான்.