தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்பதுதான் தமது சிறு வயது கனவாக இருந்தது என்கிறார் இளம் நாயகி தீப்ஷிகா.
ஆனால் நாள்களின் போக்கில், அந்த ஆசை குறைந்து, நடிகையாகிவிட்டதாகச் சொல்கிறார்.
"சிறு வயதில் நடந்தவை இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்கள் தோன்றும்போது அவர்கள் அணிந்திருக்கும் புடவை, காதணிகள், ஒப்பனை செய்துகொண்டுள்ள விதம் என அனைத்தையும் கவனிப்பார் அம்மா. எது அழகாக உள்ளது, எது சரியாக இல்லை என்று ஏதாவது குறிப்புகளைச் சொன்னபடியே இருப்பார்.
"அப்போதுதான் செய்தி வாசிக்கும் பணி மீதான ஆர்வம் அதிகரித்தது. செய்தி வாசிப்பாளர்களை இந்த அளவுக்கு நேயர்கள் கவனிப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்," என்று சொல்லும் தீப்ஷிகா, தற்போது தமிழில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
தெலுங்குப் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான போதிலும், தமிழில்தான் கூடுதல் கவனம் செலுத்த விரும்புகிறாராம். மேலும், ஓர் இசைத் தொகுப்பிலும் ஒப்பந்தமாகி உள்ளவர், ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுவதற்கும் தயங்குவதில்லை.
"தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறேன். அதில் 'மைக்கேல்' என்ற படத்தில் சிறிய கதாபாத்திரம்தான். ஆனால் கதைப்படி மிக முக்கியமானது. அந்தக் கதாபாத்திரத்தில் எனது உடல்மொழி நிச்சயம் ரசிகர்களால் பெரிதும் பேசப்படும். அதுமட்டுமல்ல, ஐந்து மொழிகளில் அப்படம் வெளியாகிறது.
"ரவிதேஜா தயாரிப்பில் ஒரு படம். தலைப்பு, மற்ற விஷயங்கள் குறித்து இப்போதே எதுவும் சொல்ல இயலாது. மேலும், நாயகியை மையப்படுத்தி உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்கிறேன்," என்கிறார் தீப்ஷிகா.
தமிழில் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்துள்ள தீப்ஷிகாவை இயக்குநர் பரதன் இயக்கும் படத்தில் 'கேசாதிபாதம்' எனத் தொடங்கும் பாடலில் பார்க்க முடியும்.
இவரது பெற்றோரின் சொந்த ஊர் சென்னை. அச்சு அசல் தமிழ்ப் பெண்ணாகவே வளர்ந்து ஆளாகி உள்ளார். கணினிப் பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.
படிக்கும்போதே பட வாய்ப்புகள் தேடி வந்தனவாம். மருத்துவராக வேண்டும் என்பதுதான் இவரது கனவு. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வும் எழுதி உள்ளார்.
"சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் அதிகம். உயிரியல் துறையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனால்தான் மருத்துவம் படிக்க விரும்பினேன். ஆனால் பொறியியல்தான் படிக்க முடிந்தது. என் தந்தை தொழிலதிபர். அம்மா இல்லத்தரசி.
"மருத்துவராக விரும்பிய தங்கள் மகள் திடீரென சினிமாவில் நடிக்கப் போவதாகக் கூறியதும் என் பெற்றோருக்கு அதிர்ச்சி. எனினும் என் விருப்பத்துக்கு குறுக்கே நிற்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே சில பெரிய படங்களில் ஒப்பந்தமானதால், அந்த அதிர்ச்சி என் மீதான கோபமாக மாறவில்லை," என்று சிரிக்கிறார் தீப்ஷிகா.
சிறிது நேரமே திரையில் தோன்றினாலும் படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தனது ஆசை என்று மற்ற நடிகைகளைப் போலவே இவரும் சொல்கிறார்.
இதைச் சாதிக்க உதவும் கதாபாத்திரங்கள் அனைத்துமே தமது கனவுப் பாத்திரங்கள்தான் என்கிறார்.
"அண்மைய செய்திகளை அறிந்துகொள்வதில் நாட்டம் அதிகம். இதன் காரணமாகவே செய்தி வாசிப்பாளராக விரும்பினேன். ஓய்வு கிடைத்தால் நிறைய எழுதுவேன். பிடித்த நடிகர் ரஜினி. அவருடைய ஸ்டைல், வேகம், நடிப்பு என எல்லாம் பிடிக்கும்.
"அப்புறம் கமல் சார். கலைக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டுள்ளது பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
"அடுத்து ஹாலிவுட் வரையிலும் போய் தமிழ் சினிமாவையும் தமிழர்களையும் தலைநிமிர வைத்துள்ள தனுஷின் தீவிர ரசிகைகளில் நானும் ஒருத்தி. அவருடைய நடிப்புக்கு நான் அடிமை," என்று சொல்லும் தீப்ஷிகா, தம்மால் இயன்றவரை இந்தத் துறையில் நீடிக்க விரும்புவதாகச் சொல்கிறார்.
"கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்று. கல்வியறிவு இருந்தால்தான் நமக்கு என்ன தேவை, நாம் எதை நோக்கிச் செல்லவேண்டும் என்பதில் தெளிவு இருக்கும். படித்தவர்கள் எங்கே போனாலும் உரிய மரியாதை கிடைக்கும். அதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன்.
"முன்பே திரையுலகுக்கு வந்திருந்தால் சில வாய்ப்புகள் முன்கூட்டியே கிடைத்திருக்கும். இந்நேரம் எனக்கான உயரத்தைத் தொட்டிருக்க முடியும் என்றும் நினைக்கிறேன். "மற்றபடி படிப்பு எனக்கு முதல் மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளது," என்கிறார் சமர்த்துப் பெண் தீப்ஷிகா.
, :

