'காம்ப்ளெக்ஸ்' என்ற பெயரில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார் இவானா. தீவிர சினிமா ரசிகர்களால் இந்த இளம் நாயகியை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
கண்டுபிடிக்க முடியாதவர்களுக்கு உதவ சிறு குறிப்பு. பாலா இயக்கத்தில் வெளியான 'நாச்சியார்' படத்தின் மூலம் 'கோட்டை அரசி'யாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இவானா.
இவரது பூர்வீகம் கேரளா. 'நாச்சியார்' படம் வெளியான பிறகு 'ஹீரோ' படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் இவானாவைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
ஏன் திடீர் இடைவெளி என்ற கேள்விக்கு, இவரது சுருக்கமான பதில், "இரண்டு ஆண்டுகள் கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி இருந்தது," என்பதுதான். எனினும் படித்துக்கொண்டே 'காம்ப்ளெக்ஸ்', 'லவ் டுடே' என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.
"'நாச்சியார்' படத்தில் நடித்தபோது அதன் இணை இயக்குநர் மந்திரா வீரபாண்டியன் அண்ணாதான் எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தார். அவர் திருவல்லாவைச் சேர்ந்தவர். நன்றாக மலையாளம் பேசுவார். அதனால், என் பெற்றோருக்கு நல்ல தோழனாகிவிட்டார். அவர்தான் 'காம்ப்ளெக்ஸ்' படத்தின் இயக்குநர்.
"கொரோனா தொற்றுப் பரவல் உச்சத்தில் இருந்தபோது போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அந்தச் சூழ்நிலையிலும், ஆபத்தை பொருட்படுத்தாமல் மந்திரா அண்ணா எங்களைப் பார்க்க கேரளத்துக்கு வந்துவிட்டார். தன்னுடைய முதல் படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாக அவர் சொன்னதும், உடனே அம்மாவும் அப்பாவும் என்ன கதை என்றுகூட கேட்காமல் அவருக்காக ஒப்புக்கொண்டார்கள். அந்த அளவுக்கு பிறர் நலனில் அக்கறையுள்ள அற்புதமான மனிதர் அவர். நல்ல படைப்பாளியும்கூட," என்கிறார் இவானா.
இந்தப் படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மகளாக நடிக்கிறாராம். கதைப்படி இவானாவும் அவரது சகோதரனும் இரட்டைப் பிறவிகள். இவானாவைவிட அவரது சகோதரன் உயரம் குறைவானவராகப் பிறந்துவிடுவார். அதனால் அவர் சந்திக்கும் 'உருவ கேலி'யும் அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதும்தான் கதையாம்.
"என் சகோதரனுக்கும் குடும்பத்துக்கும் ஆதரவாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நிஜ வாழ்க்கையில் நானும் எனது சகோதரனும் இரட்டைப் பிறவிகள்தான். பத்து வயதாக இருக்கும்போது நாங்கள் இருவருமே உயரம் குறைவாக இருந்தோம். அதனால் இருவருமே உருவ கேலிக்கு ஆளாகியிருக்கிறோம்.
"இது ஒருவகையில் வணிகப் படம்தான். ஆனால், இதில் உருவ கேலியை மந்திரா அண்ணா சுவாரசியமாகக் கையாண்டிருக்கிறார்," என்று 'காம்ப்ளெக்ஸ்' படம் குறித்த எதிர்பார்ப்பை மனதில் அதிகரிக்க வைக்கிறார் இவானா.
இவரது சொந்த ஊர் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள நாலுகோடி என்ற சிறிய கிராமம். சினிமாவுக்கும் இவரது குடும்பத்துக்கும் அறவே தொடர்பில்லை. பெற்றோருடன் திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பது மட்டுமே தமக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு என்று சிரிக்கிறார்.
"2012ஆம் ஆண்டு, 12 வயதில், ஜானி ஆண்டனி இயக்கத்தில், பிருத்விராஜ் நாயகனாக நடித்த 'மாஸ்டர்ஸ்' படத்தில் நடித்தேன். அந்தச் சமயம் என் விருப்பத்தைக் கேட்டார் என் அப்பா. மிகுந்த ஆர்வத்துடன் நடிக்கத் தயார் என்றேன். அப்பாவும் அனுமதி அளித்தார்.
பிறகு மகள், பள்ளி மாணவி என்று சில வாய்ப்புகள் தேடி வந்தன. சில ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள நாளி தழில் வெளியான என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு பாலா வாய்ப்பளித்தார்," என்கிறார் இவானா.

