தாம் நல்ல நிலையில் இருப்பதால், தமது அறக்கட்டளைக்கு பொது மக்கள் இனி நன்கொடை அளிக்கவேண்டாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதால், மக்களுக்குச் சேவை செய்யும் முழு பொறுப்பையும் தாமே ஏற்க முடிவு செய்துள்ளதாக அவர் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"எனவே, இனி என் அறக்கட்டளைக்கு யாரும் உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம். மாறாக உங்களின் ஆசிர்வாதம் மட்டுமே எனக்குப் போதுமானது.
"இத்தனை ஆண்டுகளாக எனக்கு கிடைத்த ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது 'சந்திரமுகி-2', 'ருத்ரன்' உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் லாரன்ஸ்.
நீண்ட காலமாக தமது பெயரில் இயங்கும் அறக்கட்டளை மூலம் மாற்றுத்திறனாளிகள், ஏழைக் கலைஞர்களுக்கு அவர் பல்வேறு வகையிலும் உதவிகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில், 'சந்திரமுகி-2' படத்திற்காக தமது உடற்கட்டை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ள தாகவும் தமது டுவிட்டர் பதிவில் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
'சந்திரமுகி-2' திரைப்படம் தமது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என உறுதியாக நம்புகிறாராம் லாரன்ஸ்.
இந்தப் படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் உருவாக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

