'சொப்பன சுந்தரி' என்ற வித்தியாசமான தலைப்பில் உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சந்தேகமே வேண்டாம். இது நாயகியை மையப்படுத்தும் கதைதான்.
சென்னையில் உள்ள குடிசைப் பகுதிதான் கதைக்களம். தனது கதாபாத்திரத்துக்காக தனிப்பயிற்சி மேற்கொண்டாராம் ஐஸ்வர்யா.
"படத்தின் தலைப்பை அறிவித்ததுமே பலருக்கு ஆச்சரியம். இதென்ன வித்தியாசமாக உள்ளதே... என்ன காரணம் என்று பலரும் கேட்டனர். 'இந்திரலோகத்து சுந்தரி' மாதிரி என்று சட்டென உருவகப்படுத்திட முடியாத ஒரு பெயர்தான் 'சொப்பன சுந்தரி'.
"தீவிர சினிமா ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். 'கரகாட்டக்காரன்' படத்தில் வரும் கவுண்டமணி, செந்தில் நகைச்சுவைப் பகுதியில் சொப்பன சுந்தரி பெயர் அடிபடும். அன்று முதல் இன்றுவரை அந்த நகைச்சுவை குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். 'கரகாட்டக்காரன்' படத்தைக் கொடுத்த கங்கை அமரன் சாரோட வாரிசு வெங்கட்பிரபுவை வைத்து இந்தப் படத்தின் தலைப்பை வெளியிட்டோம்," என்கிறார் 'சொப்பன சுந்தரி' இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ்.
இவர் இதற்கு முன்பு வெங்கட்பிரபுவை வைத்து 'லாக்கப்' படத்தை இயக்கிய அனுபவம் உள்ளவர். இப்போது நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையுடன் களமிறங்கி உள்ளார்.
"கதையின் நாயகி 'சொப்பன சுந்தரி' யார் என்பதும் அவரது பின்னணியும்தான் கதையின் முக்கிய அம்சங்கள். குற்றத்தையும் நன்னெறியையும் குறிப்பிடும் வகையில் ஒரு திருக்குறள் உள்ளது. கதையின் நாயகி எந்த நேரத்தில், எப்படிச் செயல்படுவாள் என்பதைக் கணிக்க இயலாது. தாம் என்ன செய்கிறோம் என்பது சில சமயங்களில் அவளுக்கே தெரியாது.
"இப்படிப்பட்ட குணாதிசயம் உள்ள பெண்ணின் பெயரும் கணிக்கமுடியாத வகையில் இருக்க வேண்டும் என விரும்பினேன். அப்போதுதான் இந்தப் பெயர் அமைந்தது," என்கிறார் சார்லஸ்.
இது 'டார்க் காமெடி' என்று குறிப்பிடப்படும் எதிர்மறை நகைச்சுவையுடன் கூடிய படமாம். பொதுவாக இதுபோன்ற நகைச்சுவைப் பகுதிகள் படித்தவர்களுக்கு மட்டும்தான் புரியும் என்பதை தம்மால் ஏற்க இயலாது என்பவர், அனைவருக்கும் புரியும் வகையில் நகைச்சுவைப் பகுதியை அமைத்துள்ளதாகச் சொல்கிறார்.
"ஐஸ்வர்யா ராஜேஷின் உழைப்பு என்னை வியக்க வைக்கிறது. இந்தக் கதைக்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தக் கதை நடக்கும் குடியிருப்புப் பகுதி, அங்குள்ள மக்களின் வாழ்வியல், உடல்மொழி என அனைத்தையும் விவரிக்கும் வகையில் ஒரு குறும்படமே எடுத்துவிட்டோம். அதை ஐஸ்வர்யாவிடம் தந்ததும், சிறப்புப் பயிற்சி மேற்கொண்டார். குறும்படத்தில் பார்த்த மக்களின் இயல்புகளை மிக நேர்த்தியாக தமது நடிப்பில் வெளிப்படுத்தினார்.
"அவர் நல்ல கதைகளாகத் தேடி, தேர்வு செய்கிறார். கதைத் தேர்வும் அதற்கான உழைப்பும் மற்ற இளம் நடிகைகள் பின்பற்றவேண்டிய ஒன்று. குறும்படத்தை பார்த்து மட்டுமே அவர் தயாரானதாகச் சொல்லிவிட முடியாது. அவரும் தன் பங்குக்கு தகவல்களைத் தேடிப் பிடிக்கிறார். அதற்கேற்ப நடிப்பையும் மெருகேற்றிக் கொள்கிறார்," என்கிறார் சார்ல்ஸ்.
'சூது கவ்வும்', 'டாக்டர்' படங்களில் ரசிகர்கள் பார்த்து ரசித்த நகைச்சுவையின் சாயலை இந்தப் படத்திலும் பார்க்க முடியுமாம். சிரிப்பதற்கு யோசிக்க வேண்டிய அவசியம் இல்லாத நகைச்சுவை காட்சிகள் இருக்கும் என்கிறார்.
"திருமணமாகாத நாயகி நன்கு படித்தவர். அவருக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை. மூவரும் தாயாருடன் வசித்து வருகின்றனர்.
"அம்மாவாக தீபா சங்கர், நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, லட்சுமிப்ரியா, சுனில் ரெட்டி, கிங்ஸ்லி, கருணாகரன், மைம்கோபி, பிஜான், சாரா என்று மேலும் பலர் உள்ளனர்.
"அருமையான தொழில்நுட்பக் குழுவும் அமைந்துள்ளது. விக்னேஷ், ராஜகோபாலன் என்று இரு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றி உள்ளனர். அஜ்மல் தக்சீன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
"முழுக்க முழுக்க சென்னையில் காட்சி களைப் படமாக்கி உள்ளோம். குடிசைப் பகுதிகளில் எடுக்கவேண்டிய காட்சிகளுக்காக தனி அரங்கு அமைத்தோம்.
"நாயகியை மையப்படுத்தி படம் எடுக்கும்போது தயாரிப்புச் செலவு குறைகிறது. அதேசமயம் யதார்த்தமான, நல்ல கதை அமைந்தால்தான் குறைந்த செலவில் திட்டமிட்டு ஒரு படத்தை உருவாக்க முடியும்.
"இந்தப் படத்தில் அனைத்தும் நல்லவிதமாக அமைந்ததால், நல்ல படைப்பாக உருவாகி உள்ளது," என்கிறார் இயக்குநர் சார்ல்ஸ்.
, :

