கனடாவில் நடைபெற்ற டொரோன்டோ திரைப்பட விருது விழாவில் சிறந்த புராணப் படமாக சிபிராஜ் நடித்துள்ள 'மாயோன்' தேர்வாகி உள்ளது.
கடந்த 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 47வது அனைத்துலகத் திரைப்பட விழா டொரோன்டோ நகரில் நடைபெற்றது. இதில் பல நாடுகளில் இருந்து பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் பங்கேற்றன.
இதில் இந்தியாவில் இருந்து புராணங்களுக்கான திரைப்படப் பிரிவில் தமிழில் தயாரிக்கப்பட்ட 'மாயோன்' படம் பங்கேற்றது. இதில் சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் இணைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில், விருது கிடைத்திருப்பது மனநிறைவு அளிப்பதாக இப்படத்திற்கு திரைக்கதை எழுதி தயாரித்த அருண்மொழி மாணிக்கம் தெரிவித்தார்.
"இந்தப் படத்திற்கு ஏற்கெனவே தமிழ் ரசிகர்கள் அளித்த ஆதரவு எங்களை மகிழ்ச்சி அடையச் செய்தது. தற்போது அனைத்துலகத் திரைப்பட விருதும் கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
"இதே வேகத்துடனும் உற்சாகத்துடனும் 'மாயோன்' இரண்டாம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்கியிருக்கும் எங்களுக்கு, இந்த விருது புது உத்வேகத்தை அளித்திருக்கிறது," என்கிறார் அருண்மொழி மாணிக்கம்.

