இந்தித் திரையுலகிலும் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
அதிலும் அமிதாப் பச்சனுடன் திரையைப் பகிர்ந்து கொள்வது குறித்து அவர் அளித்த பேட்டிகளுக்கு இந்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அண்மைய பேட்டி ஒன்றில், 'நான் ஒரு பஞ்சு போன்றவள். அதனால், என்னுடன் நடிக்கும் நடிகர்களின் திறமைகளை உறிஞ்சிக் கொள்வேன்' என்று ராஷ்மிகா கூறியதை திரையுலகத்தினர் மிகவும் ரசித்து பாராட்டி உள்ளனர்.
ராஷ்மிகாவைப் பொறுத்தவரை, எப்போதுமே கலகலப்பாகவும் புன்சிரிப்புடனும் காணப்படுபவர்.
உடன் நடிக்கும் கலைஞர்களிடம், குறிப்பாக கதாநாயகர்களிடம் மிகவும் இயல்பாகப் பேசி தனது நட்பு வளையத்துக்குள் கொண்டு வந்துவிடுவார்.
விஜய்யுடன் இணைந்து நடிக்கும் படத்துக்கான பூசை போடப்பட்டபோது, அவர் செய்த சேட்டைகளை விஜய் ரசிகர்கள் இன்னும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், ஏக்தா கபூரின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'குட்பை' என்ற இந்தி திரைப்படத்தில் அமிதாப்புடன் நடித்துள்ளார் ராஷ்மிகா.
"குடும்பத்தின் முக்கியத்துவம், ஒவ்வொரு சூழலிலும் வாழ்க்கையை எவ்வாறு கொண்டாட வேண்டும், அர்த்தமுள்ளதொரு வாழ்வை வாழ உதவக்கூடிய அம்சங்கள் குறித்து இந்தப் படம் விவரிக்கும்.
"மேலும் சுய உண்மையை அறிதல் (தன்னிலை, தன்மதிப்பு போன்றவற்றை அறிதல்) ஆகியவை இப்படத்தில் அழகாக வர்ணிக்கப்பட்டு உள்ளன.
"ஒவ்வொரு குடும்பமும் எதிர்கொள்ளும் வாழ்வின் ஏற்ற, இறக்கங்களை யதார்த்தமான காட்சி, வசனங்கள் மூலம் பதிவு செய்துள்ளார் இயக்குநர்.
"இந்தப் படத்தில் நடித்த பின்னர் என்னுள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டதாக உணர்கிறேன்," என்கிறார் ராஷ்மிகா.
தமது திரைப் பயணத்தை இனி 'குட்பை' படத்துக்கு முன், பின் எனப் பிரித்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், அமிதாப்புடன் இணைந்து நடித்த பின்னர் தாம் முதிர்ச்சியான நாயகியாக உருவெடுத்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது என்கிறார்.
"அமிதாப் பச்சன் மற்ற அனைவரையும்விட சிறந்த ஆசான் என்பேன். புகழின் உச்சியை எப்போதோ தொட்டுவிட்டவர்.
"இருப்பினும் எளிமையான மனிதராகப் பேசிப் பழகுகிறார். படப்பிடிப்புக்கு முந்தைய நாள் வரை அவரைப் பற்றிய பயம் இருந்தது. ஆனால் முதல் நாளன்றே என் மனதில் இருந்த பயம் நீங்கிவிட்டது. காரணம் அவரது நட்பான, பாசமான அணுகுமுறை," என்கிறார் ராஷ்மிகா.

