'யானை' படத்தின் வெற்றி தமக்கான பொறுப்புகளை அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார் அருண் விஜய். அதன்பின்னர் வெளியான 'சினம்' படத்தில் இவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளது.
இனி கதைத் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை இவ்விரு படங்களும் தமக்கு கற்றுத் தந்துள்ளதாகச் சொல்கிறார்.
"நல்ல கதைகள், என்னுடைய நடிப்பு என அனைத்திலும் கவனம் செலுத்தவேண்டும் என முடிவு செய்துள்ளேன். ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை எப்படி ஆச்சரியப்படுத்தலாம் என்று யோசிப்பேன்.
"என்னுடைய கதை தேர்வுகள் எப்போதுமே என்னை ரசிகர்களுடன் இணைப்பதுபோன்று இருக்கும். மேலும், இரண்டரை மணி நேரமும் திரையுடன் கட்டிப்போட்டது போன்று அவர்கள் உணர வேண்டும். அதற்கான அம்சங்களில்தான் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறேன்.
"படம் பார்க்கும் ரசிகர்கள் அதில் இருந்து ஏதாவது ஒரு விஷயத்தை தன்னுடன் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் ஆசை," என்கிறார் அருண் விஜய்.
சினிமா என்பது குழுவாக செயல்பட வேண்டிய துறை என்று குறிப்பிடுபவர், இயக்குநர்தான் முதல் புள்ளி என்கிறார்.
"இயக்குநரின் பார்வை, நடிகர்களின் பங்களிப்பு ஆகிய இரண்டும் சேரும்போதுதான் ஒரு கதாபாத்திரம் முழுமை பெறுகிறது. எனினும் நடிகரைவிட இயக்குநரின் பங்கும் பொறுப்பும் மிக முக்கியம்.
"ஏனெனில் நடிகர்களை மெருகேற்றுவது இயக்குநர் தான். பாலசந்தர் சார் ரஜினியை செதுக்கியவர்.
"ஒரு திரைப்படம் உருவாகும்போது இயக்குநர்தான் முதல் புள்ளி. அடுத்து அவருக்கும் கதாநாயகனுக்குமான புரிதல். இயக்குநர் எதிர்பார்க்கும் நடிப்பை வழங்க வேண்டும் எனில் நான் குறிப்பிடும் இந்த சமன்பாடு முக்கியம்.
"மேலும் ஒரு கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது இயக்குநர். அருண் விஜய் என்ற மனிதனாக ரசிகர்களை சென்றடைவதைவிட, ஒரு கதாபாத்திரமாக ரசிகர்களைக் கவர்வது எளிது," என்கிறார் அருண் விஜய்.
சம காலத்தில் நடித்து வரும் மற்ற கதாநாயகர்களைத் தாம் போட்டியாகக் கருதியதே இல்லை என்று குறிப்பிடுபவர், தமது முந்தைய படம்தான் தமக்குப்போட்டி என்கிறார்.
"இன்றுள்ள அனைத்து கதாநாயகர்களுமே அவரவரிடம் உள்ள தனித் திறமையால் மேலே வந்தவர்கள். மற்றவர்களை நான் போட்டியாகக் கருதியதில்லை.
"அதேசமயம் மற்ற படங்களில் உள்ள நல்ல விஷயங்களைக் கவனிப்பேன்," என்று சொல்லும் அருண் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் 'பார்டர்'.
இது இயக்குநர் அறிவழகனும் அருண் விஜய்யும் மீண்டும் இணைந்துள்ள படம். முக்கியமான காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்குமாம்.
நாட்டுப்பற்றை வலியுறுத்தும் கதை.
ஒரு படத்தின் வெற்றிக்கு விளம்பரங்கள் முக்கிய பங்களிக்கும் என்று நம்புகிற நடிகர்களின் பட்டியலில் அருண் விஜய்க்கும் இடமுண்டு.
'யானை' பட விளம்பரத்துக்காக இவரும் படக்குழுவினரும் ஊர், ஊராகச்சென்று விளம்பரம் செய்து புதுயுக்தியைத் தொடங்கி வைத்தனர். அதையடுத்து 'விக்ரம்', 'விருமன்', 'கோப்ரா', 'கேப்டன்' என்று பல படங்கள் அதே வழியைப் பின்பற்றி உள்ளன.
"என்னுடைய படங்களுக்கு முன்பே இதுபோன்ற விளம்பரங்களைச் செய்துள்ளேன். 'மாஞ்சா வேலு', 'மலை மலை' படங்களை இப்படித்தான் விளம்பரப்படுத்தினோம்.
அப்போது இந்த யுக்தி பெரிதாகப் பேசப்படவில்லை. இப்போது சமூக ஊடகங்கள் இருப்பதால் எல்லாம் சாத்தியமாகிறது.
மேலும், ரசிகர்களுடன் கலந்துரையாடுவது, சென்னையில் இருந்தபடியே வெளியூரில் உள்ள திரையரங்குகளில் படம் பார்க்க வருபவர்களை உற்சாகப்படுத்துவது என பலவற்றை திட்டமிட்டுச் செய்ய முடிகிறது," என்கிறார் அருண் விஜய்.
'பார்டர்' திரைப்படத்திலும் வழக்கம் போல் சண்டைக் காட்சிகளில் மிரள வைத்துள்ளாராம். படம் மிக விரைவில் வெளியீடு காண உள்ளது.
அருண் விஜய்
, :


