நடிகர் ஆர்யா திரையுலகில் அறிமுகமாகி சுமார் இருபது ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் பல்வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்தியதால் தமது நடிப்புத் திறமை மெருகேறியதாகவும் ஒரு நடிகராக தம்மால் தாக்குப்பிடிக்க முடிகிறது என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சைக்கிளோட்டம், மெதுவோட்டம், எடை தூக்குதல் எனப் பல்வேறு விளையாட்டுகளிலும் உடற்பயிற்சி நட வடிக்கைகளிலும் ஆர்வம் கொண்டவர் ஆர்யா. பல்வேறு உலக நாடுகளில் நடைபெறும் மிதிவண்டிப் போட்டிகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டன் எடின்பர்க்கில் நடைபெற்ற 1,540 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கும் மிதிவண்டிப் போட்டி தமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது என்று குறிப்பிடுபவர், இந்தப் போட்டியில் பங்கேற்றதன் மூலம் தமது தன்னம்பிக்கை கூடியுள்ளது என்றும் ஒரு நடிகராக தாம் இன்னும் மேம்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.
"125 மணி நேரத்துக்குள் போட்டி தூரத்தைக் கடந்தாக வேண்டும். அதைச் சாதிப்பது அள்வளவு எளிதல்ல. இலக்கை குறித்த நேரத்தில் அடைய முடிந்தது எனில், இதற்காக பல்வேறு தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது.
"எதிர்காற்று வீசும்போது மிதி வண்டியில் பயணம் செய்வது மிகக் கடினம். எந்தவொரு கலையாக இருந்தாலும், ஒழுக்கமான அணுகுமுறையும் செயல்பாடும் மிக அவசியம். நான் பங்கேற்கும் விளையாட்டுகள் இந்த ஒழுக்கத்தைக் குறைவின்றிக் கற்றுத் தருகின்றன. ஒழுக்கம்தான் வாழ்க்கையில் வெற்றியைத் தரும். நான் நல்ல உடல்நலத்துடன் இருந்தால்தான் ஒரு நடிகனாக என்னை நூறு விழுக்காடு வெளிப்படுத்த முடியும்," என்கிறார் ஆர்யா.
அண்மையில் வெளியான 'கேப்டன்' படத்தில் துணிச்சல்மிக்க ராணுவ வீரராக தம்மால் கம்பீரமாக நடிக்க முடிந்ததற்கு தமது கட்டொழுங்கான உடற்கட்டும் உடல்நலமும்தான் காரணம் என்று சுட்டிக்காட்டுபவர், இதுபோன்ற கதாபாத்திரங்களில் எல்லாராலும் நடித்துவிட இயலாது என்கிறார்.
"இப்போதெல்லாம் கதாநாயகர்களிடம் இருந்து இயக்குநர்கள் மிக அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். ஆழ்கடல் நீச்சல் வீரர் முதல் விமானி வரை எத்தகைய கதாபாத்திரங்களையும் ஏற்க நாம் தயாராக இருக்கவேண்டும்.
"அண்மையில் வெளியான 'கேப்டன்' படத்தில் இடம்பெறும் காட்சிக்காக நூறு அடி உயரத்தில், அந்தரத்தில் கயிறு கட்டி என்னைத் தொங்கவிட்டனர். கேரளாவின் மூணாறு பகுதியில் இந்தக் காட்சி படமாக்கப்பட்டது.
"இதேபோல் எந்தவிதமான கூடுதல் பாதுகாப்புக் கருவிகளும் இல்லாமல் ஆழ்கடல் நீச்சலுடன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன. இதற்காக குறுகியகால பயிற்சியை மேற்கொண்டு, சுமார் 12 அடி ஆழத்தில் நீச்சலடித்தேன்.
"இதுபோன்ற ஆபத்தான காட்சிகளில் நடிக்கவேண்டும் எனில், பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று உங்கள் மனதையும் உடலையும் நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும்.
"இப்படி எல்லாம் செய்தால்தான் இயக்குநரையும் ரசிகர்களையும் கவர முடியும். அந்த வகையில் நான் ஒரு விளையாட்டுப்பிள்ளை எனலாம்," என்று சொல்லிச் சிரிக்கிறார் ஆர்யா.
இதற்கு முன்பு காதலும் நகைச்சுவையும் கொண்ட கதாநாயகனாக ரசிகர்களைக் கவர்ந்த இவர், இனிமேல் அதிரடி நாயகனாகவும் பெயரெடுக்க விரும்புகிறாராம். அதேசமயம் நகைச்சுவையைத் தம்மால் கைவிட முடியாது என்கிறார்.
'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சந்தானத்தைப் போலவே ஆர்யாவும் ஆவலுடன் இருக்கிறார்.
"நகைச்சுவையான கதாபாத்திரங்களுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். எனினும் அத்தகைய கதை, கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பது அவசியம். ஏனெனில் நல்ல இயக்குநர், கதை, சக நடிகர்கள் அமைந்தால்தான் கதாநாயகனின் பாத்திரமும் எடுபடும்.
"சந்தானத்துடன் மீண்டும் இணைந்து நடிக்க பல மடங்கு ஆர்வம் உள்ளது. இருவருக்குமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதை, திரைக்கதை அமைக்கப்பட வேண்டும். இருவருமே நல்ல கதைகளுக்காகக் காத்திருக்கிறோம்.
"சந்தானத்துடன் இணையும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். சூழ்நிலை சாதகமாக அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்பது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகக்கூடும்," என்று நல்ல புரிதலுடன் பேசுகிறார் ஆர்யா.
, :