இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்ட நிலையில், நகைச்சுவை நடிகர் போண்டா மணி உயிருக்குப் போராடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நடிகர் விவேக் உயிரோடு இருந்திருந்தால் மருத்துவ சிகிச்சைக்காகவும் தமது குடும்பத்துக்காகவும் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்கிறார் போண்டா மணி.
"தகவல் கிடைத்திருந்தால் விவேக் ஓடிவந்து உதவியிருப்பார். அதற்காக யாருமே என்னைக் கண்டுகொள்ளவில்லை என்று சொல்லமாட்டேன்.
"மயில்சாமி, பெஞ்சமின் என்று என்னுடன் நடித்த நடிகர்கள் பலரும் நேரில் வந்து நலம் விசாரிக்கிறார்கள். வடிவேலு சாருடன் இணைந்த பிறகுதான் போண்டா மணி என்று ஒரு நடிகர் இருப்பது வெளியே தெரியத் தொடங்கியது. நிறைய படங்களில் நடித்துள்ளேன் என்றாலும் பெரிய அளவில் சொத்து சேர்க்கவில்லை. சொந்த வீடுகூட கிடையாது.
"என் மனைவி மாற்றுத்திறனாளி. என் மகள் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார். மகன் பத்தாம் வகுப்பில் உள்ளார். அன்றாடம் நான் சம்பாதித்துக் கொடுக்கும் பணத்தை நம்பித்தான் குடும்பம் உள்ளது. பிள்ளைகளைக் கரை சேர்க்கவேண்டும் என்ற பொறுப்பு பயத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. அவர்களுக்காக இதுவரை எதுவுமே சேர்த்து வைக்கவில்லை," என்கிறார் போண்டா மணி.
"அண்மையில் மூச்சுவிட சிரமப்பட்டேன். அப்போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பரிசோதனைகளின் மூலம் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டது தெரியவந்தது.
"எல்லாரையும் சிரிக்க வைத்தேன். ஆனால் என் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரம் ஏற்பட்டதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை. உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே சில காலம் வாழ முடியும். தமிழக அரசும் எனது திரையுலக நண்பர்களும் உதவினால் நன்றாக இருக்கும்," எனக் கண்ணீர்க் கோரிக்கையை முன்வைத்துள்ளார் போண்டா மணி. உயிருக்குப் போராடும் இவரை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விரைவில் சந்திக்க உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.