நடிகர், தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என எந்தப் பொறுப்பாக இருந்தாலும் கச்சிதமாகச் செயல்படக் கூடியவர் சூர்யா. நல்ல கதைகளைத் தேர்வு செய்வதிலும் கெட்டிக்காரராக உள்ளார்.
'பாகுபாலி', 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களை அடுத்து, சூர்யாவும் சரித்திரப் படம் ஒன்றில் நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்தப் படத்தை சங்கர் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும், ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தப் படம் உருவாக இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. இதுகுறித்து சூர்யா, சங்கர் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.
எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய 'வேள்பாரி' நாவலைத்தான் சங்கர் திரைப்படமாக்க உள்ளார் என்றும் இதில் நடிக்க சூர்யா சம்மதித்துள்ளார் என்றும் தமிழக ஊடகம் தெரிவிக்கிறது.
தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த செய்தி குறித்து சமூக ஊடகங்களில் இப்போதே விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.
இயக்குநரும் கதாநாயகனும் ஏதும் தெரிவிக்காத நிலையில், இந்தப் படம் குறித்த தகவல்களை எப்படி நம்ப முடியும் என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால், விவரமறிந்தவர்களோ, அண்மையில் மதுரையில் 'விருமன்' பட விழாவையும் அதில் பேசப்பட்ட விஷயங்களையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிகழ்வில் சூர்யா, சங்கர், சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சங்கர், சூர்யா தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதாகப் பாராட்டினார்.
"கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளிலும் அவர் சிறப்பாகச் செயல்படுவதைப் பாராட்ட வேண்டும்," என்றும் சங்கர் குறிப்பிட்டார்.
இதேபோல், அந்த விழாவில் கலந்துகொண்ட மற்ற பிரமுகர்களும் சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதையடுத்து பேசிய சூர்யா, தமிழர்களின் முக்கியமான அடையாளமாக 'காவல் கோட்டம்', 'வேள்பாரி' ஆகிய நாவல்களைக் குறிப்பிடலாம் என்றார்.
"இந்தப் படைப்புகளைத் தந்த எழுத்தாளர் சு.வெங்கடேசனோடு பயணிப்பது அழகான அனுபவமாக இருக்கும். அதுகுறித்து இப்போது பேச இயலாது. அடுத்து அமையும் மேடையில் இதுகுறித்து விரிவாகச் சொல்கிறேன்," என்று புதிர் போட்டார் சூர்யா.
விழா மேடையில் அமர்ந்திருந்த சங்கர் இதைக் கேட்டு புன்னகைத்தார். இதன் மூலம் 'வேள்பாரி' நாவல் திரைப்படமாவது உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
சூர்யா இப்போது பாலாவின் இயக்கத்திலும் 'சிறுத்தை' சிவாவின் இயக்கத்திலும் நடித்து வருகிறார். அடுத்து வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தையும் கைவசம் வைத்திருக்கிறார்.
அதே போல், சங்கர் இப்போது தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தையும் கமல் நடிக்கும் 'இந்தியன்' இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். எனவே, சங்கர், சூர்யா இணையும் படம் எப்போது தொடங்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
சூர்யா இப்போது சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் கதை, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாம். எனவே, படப்பிடிப்பு நிதானமாகத்தான் நடந்து வருகிறதாம்.
வெற்றிமாறனும் 'வாடிவாசல்' படத்தின் பணிகளில் இன்னும் உரிய வேகம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், 'வேள்பாரி' சரித்திரக் கதை என்பதால், அதற்கான சூழல்கள், தொழில்நுட்ப அம்சங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து சங்கரும் சூர்யாவும் விவாதித்து வருகின்றனர் என்றும் படத்தயாரிப்பு தொடர்பில் இருவருக்கும் உள்ள சந்தேகங்கள் முடிவுக்கு வந்த பிறகே, இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சூர்யாவின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் மூன்று இளம் இயக்குநர்களை வைத்து அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்க உள்ளதாம்.
மூன்று படங்களுமே மிக வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

