'கரகாட்டக்காரன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கங்கை அமரன் இயக்கத்தில் உருவான 'கரகாட்டக்காரன்' படம் மாதக்கணக்கில் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றது. ராமராஜனும் கனகாவும் நாயகன், நாயகியாக நடித்த அப்படத்தின் பாடல்களும் நகைச்சுவைக் காட்சிகளும் திரைக்கதையும் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் இயக்குநர் கங்கை அமரன் ஈடுபட்டார். கீர்த்தி சுரேஷை நாயகியாக நடிக்க வைப்பது அவரது திட்டமாக இருந்தது.
அதேபோல், ராமராஜன் கதாபாத்திரத்தில், பக்கத்து ஊரைச் சேர்ந்த நடனக் கலைஞராக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார் கங்கை அமரன்.
கதைப்படி, கீர்த்தி சுரேஷின் தந்தை வேடத்தில் நடிக்க ராமராஜனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். அவர் கதாநாயகனாக மட்டுமே நடிக்க விருப்பம் என்று திட்டவட்டமாக கூறியதை அடுத்து, இரண்டாம் பாகத்துக்கான முயற்சியைக் கைவிட்டுவிட்டார் கங்கை அமரன்.
இந்நிலையில், முன்னணி படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்று, இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. கங்கை அமரன் திட்டமிட்டபடியே, கீர்த்தி சுரேஷையும் விஜய் சேதுபதியையும் ஒப்பந்தம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் ராமராஜனுக்குப் பதில் ராஜ்கிரண் போன்ற மூத்த நடிகரை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராமராஜன் இப்போது 'சாமானியன்' என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கை அமரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் ராமராஜன் வெற்றி பெற வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"என்னைப் பொறுத்தவரை, இயக்குநராக கதைக்கு என்ன மாதிரியான நடிப்பு வேண்டுமோ, அதை நடிகர்களிடம் இருந்து பெறுவேன். ராமராஜனிடமும் அப்படித்தான் என்றாலும், தனிப்பட்ட முறையில் அவரை எனக்குப் பிடிக்கும். அவர் சாமானியனல்ல, அசாதரணமானவர்," என்கிறார் கங்கை அமரன்.

