தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார் துல்கர் சல்மான். ரசிகர்கள் தம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்த நடிகர்களில் துல்கரும் ஒருவர் என திரையுலகத்தினர் பாராட்டுகிறார்கள்.
வெற்றி, தோல்விகளை இயல்பாக எதிர்கொள்ளும் துல்கர், தமக்கு 'பாக்ஸ் ஆஃபீஸ்' கணக்குகளில் ஆர்வம் இல்லை என்கிறார். எனினும் படத்தின் வசூலை வைத்துத்தான் அடுத்தகட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்துள்ளதாகவும் சொல்கிறார்.
"ஏன் எந்த மொழியிலும் தொடர்ச்சியாகவும் அதிக படங்களிலும் நடிப்பதில்லை என்று கேட்கிறார்கள். மலையாளத்தில் எனது படங்கள் வெளியாகும் போது ஒருவித பரபரப்பை மனதில் உணர்வேன். காரணம், அங்கு எடுத்த எடுப்பிலேயே புதுப்படங்களுக்கு வரவேற்பு கிடைக்க வேண்டும். அதிக வசூலைக் கொடுக்க வேண்டும் எனும் நிர்பந்தங்கள், எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்தான் புதுப்பட வெளியீடு இருக்கும். ஒரு படத்தின் வசூலை வைத்துத்தான் சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.
"இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் என்னால் சிறப்பாக நடிக்க முடியும் எனில், எந்த மொழியிலும் என்னால் சாதிக்க முடியும். எத்தகைய சவாலான கதைக்களங்கள், கதாபாத் திரங்களாக இருந்தாலும் அவற்றை ஏற்று நடிக்கத் தயார்.
"என்னைப் பொறுத்தவரை துல்கர் சல்மான் என்பவர் ஒரு நடிகராக மட்டுமே ரசிகர்களால் அறியப்பட வேண்டும். மாறாக திரை நட்சத்திரமாக பிரபலமாவதில் எனக்கு விருப்பவில்லை. இப்படிச் சொல்வதால் ஒருசிலர் கிண்டல் செய்யக்கூடும். உண்மையில் இதுஒரு விசித்திரமான, வித்தியாசமான பயணம் தான். அதேசமயம் இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்து அனுபவித்து வருகிறேன்," என்கிறார் துல்கர் சல்மான்.
தன்னைப் பற்றிய விமர்சனங்களை திறந்த மனதுடன் வரவேற்பதாகக் குறிப்பிடுபவர், ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் தம்மிடம் என்ன பிடிக்கவில்லை என்பதை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி ஏற்படுவதாகச் சொல்கிறார்.
"இதுபோன்ற விஷயங்களை அறிவதன் மூலம் நம்மை மெருகேற்றிக்கொள்ள இயலும். நல்ல கதைகளைத் தேர்வு செய்யவும் உதவும். பொதுவாக என்னைப் பற்றி சொல்லப்படும் நூறு நல்ல விஷயங்களை நான் பெரிதாகக் கருதுவதில்லை. மூன்று பேர் குறை சொல்கிறார்கள் எனில், அவற்றை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவேன்.
"எனது குணாதிசயம் எப்படிப்பட்டது என்பதை குடும்பத்தார் நன்கு புரிந்து வைத்துள்ளனர். ஒரு புதுப்படம் வெளியாகும் நாளன்று சிறுத்துப்போன முகத்துடன் வீட்டைச் சுற்றி நடந்து கொண்டிருந்தால், உடனே விசாரணை தொடங்கிவிடும். 'கைப்பேசியில் என்ன படித்துக் கொண்டிருக்கிறாய்... படித்தவரை போதும்' என்பார்கள். எனது படங்கள் குறித்த விமர்சனங்கள் அனைத்தையும் தவறாமல் படித்துவிடும் பழக்கம் இப்போது வந்துள்ளது," என்கிறார் துல்கர்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட 'சீதா ராமம்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூல் அதிகரித்து வருவது துல்கருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
"இந்தப் படத்துக்காக அனைவரும் நிறைய மெனக்கெட்டோம். காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு இருந்த வேளையில் படப்பிடிப்பை நடத்தினோம்.
"தண்ணீர் உறைந்துபோன பகுதி களில் மைனஸ் 22 டிகிரி குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, அனை வருமே விறைத்துப் போனோம். படக் குழுவில் இருந்த சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
"படப் பிடிப்பின்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தப் பட்டிருந்தன. இந்தப் படம் தனிச்சிறப்பு வாய்ந்தது என்றும் பெரிய அளவில் வெற்றிபெறும் என்றும் அனைவரும் நம்பினோம்.
"அதுதான் மொத்த படக்குழுவையும் கடுமையாக உழைக்கத் தூண்டியது," என்று சொல்லும் துல்கர் சல்மான், அடுத்து 'சுப்' என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்குப் பொருத்தமான (பான் இந்தியா) படம் என்று முத்திரை குத்தப்படுவதை தம்மால் ஏற்க முடியவில்லை என்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால் எல்லா மொழியினரும் அவற்றை ரசிப்பார்கள் என்றும் சொல்கிறார் துல்கர்.

