எங்கு திரும்பினாலும், 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் குறித்த பேச்சாக இருக்கிறது.
இந்நிலையில், இந்தக் கதையை 'கல்கி' இதழில் தொடராக வெளியிட்ட கல்கி குழுமம், தற்போது குறும்படம் ஒன்றைத் தயாரித்துள்ளது.
"பராக்... பராக்... கல்கியின் பொன்னியின் செல்வன்... வந்தியத் தேவன் பாதையில் ஓர் அனுபவப் பயணம்" என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை காணொளித் தொகுப்புகளாக உருவாக்கி உள்ளனர்.
16 பாகங்களாக யூடியூப் தளத்தில் தொடர்ந்து 16 நாள்களுக்கு இந்தக் காணொளிகள் வெளியாக உள்ளன.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு இந்த ஆவணப்படத்தை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சாகாவரம் பெற்ற நாவல் 'பொன்னியின் செல்வன்' என்றும் 70 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும்கூட லட்சக்கணக்கான வாசகர்கள் மனதில் இந்தப் படைப்பு நிலைத்து நிற்கிறது என்றும் புகழாரம் சூட்டினார்.