இரவு வேளையில் நடிகர் விஷால் வீட்டில் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது மேலாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் அண்ணா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார் விஷால். அண்மையில் இரவு நேரத்தில் இவரது வீட்டின் மீது சிலர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில், வீட்டின் கண்ணாடி சேதமடைந்தது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், சிவப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இத்தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து, விஷால் சார்பில் அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். விஷால் படப்பிடிப்பற்காக வெளியூர் சென்றுள்ளார். அவர் தற்போது 'லத்தி' உட்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவற்றுள் 'துப்பறி வாளன்' படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார்.

