ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் நடித்தாலே சில சிக்கல்கள் எழும் என்பார்கள். ஆனால் அசோக் செல்வனோ, 'நித்தம் ஒரு வானம்' படத்தில் ஐந்து நாயகிகளுடன் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திக் கைவண்ணத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ரீது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் படம் முழுவதும் வந்து போவார்களாம்.
நான்காவது, ஐந்தாவது நாயகிகள் யார் என்பதுதானே உங்கள் கேள்வி. நான்காவது நாயகி நடிகை ஷிவதா.
"கதைப்படி மூன்று நாயகிகள் தேவைப்பட்டனர். அதற்காக முப்பது நாயகிகளை நேரில் சந்தித்து கதையை விவரித்திருக்கிறேன். எல்லாருமே கதை பிடித்திருப்பதாகச் சொன்னாலும், கால்ஷீட் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக நடிக்க முடியவில்லை என்று கைவிரித்துவிட்டனர். அதன் பிறகுதான் மூன்று பேரை ஒப்பந்தம் செய்ய முடிந்தது.
"என் கதையின் இன்னொரு நாயகி என்றால் அது இயற்கைதான். படம் தொடங்கும்போதே 'இயற்கைக்கு நன்றி' என்கிற வாசகம்தான் முதலில் இடம்பெறும். நாம் இயற்கையை நம்பினால் என்ன மாதிரியான மாய வித்தைகள் நடக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.
"மழை வர வேண்டும் என்று நினைத்தால் மழை, பனி என்றால் கொட்டும் பனி என்று எல்லாமே என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பத்தான் நடந்தன. முதலில் குறிப்பிட்ட மூவரைத் தவிர, நான்காவதாக ஷிவதாவைக் குறிப்பிட வேண்டும்.
"ஒரு பாடல் காட்சிக்காக தொடர்ந்து நான்கு மணி நேரம் கொட்டும் மழையில் அசராமல் பாடி, ஆடி நடித்தார். ஒரு கதாநாயகி இந்த அளவுக்கு தொழில் பக்தியுடன் இருப்பார் என எதிர்பார்க்கவே இல்லை. அவ்வளவு ஏன்... ஓரிரு நிமிடங்கள் ஓய்வெடுக்க கேரவன் வாகனத்தைக்கூட அவர் பயன்படுத்தவில்லை," என்கிறார் இயக்குநர் கார்த்திக்.
இவ்வளவு கதாநாயகிகள் இருந்தும் தன் படத்தில் ஒரு முத்தக்காட்சிகூட இருக்காது என்று சொல்லி கண்சிமிட்டுபவர், நாயகனின் கதாபாத்திரம் மிக சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது என்கிறார்.
"கதைப்படி என் கதாநாயகன் தன்னைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் ஏதோ ஒரு வகையிலே தனிமை விரும்பியாகவே இருப்பான். ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அவனது மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். ஒருவித மன அழுத்தத்துடனேயே வலம் வருபவன், நண்பர்களிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் அடியோடு மாறிப்போவான்.
"பொதுவாக இதுதான் மனித இயல்பு. தன்னிடம் காணப்படும் சில மாற்றங்களை, தனது குணாதிசயத்தை நாயகன் எப்படிச் சாதகமாக மாற்றிக்கொள்கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்கரு. தமிழிலும் தெலுங்கிலும் ஆறு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளது. அந்தத் துணிச்சலில் நான் எழுதிய கதையை அசோக் செல்வனிடம் விவரித்தேன். அவருக்குப் பிடித்துப்போனதால் இன்று இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்," என்கிறார் ஆர்.கார்த்திக்.
அப்பாவியான, எதற்கெடுத்தாலும் ரகளை செய்யும் கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்றுள்ள அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இன்றைய நவநாகரிக பெண்ணாக ரீது வர்மாவும் அண்டை வீட்டுப்பெண் போன்ற பாத்திரத்தில் சிவாத்மிகா ராஜசேகரும் நடித்துள்ளனர்.
"அபர்ணா பத்து நாள்கள்தான் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால், எட்டு நாள்களிலேயே தனக்கான அனைத்து காட்சிகளிலும் நடித்து முடித்துவிட்டார்.
"இடையில் ஒரு நாள் அவருக்கு கடும் காய்ச்சல். இருந்தாலும், படப்பிடிப்பு பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக காய்ச்சலைப் பொறுத்துக்கொண்டு அவர் நடித்தார்.
"ஒப்பனையாளர் என்னிடம் வந்து, அபர்ணாவின் முகம் காய்ச்சலால் சுடு கிறது என்று பதற்றத்துடன் சொன்னார். ஆனால் அபர்ணாவோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் தனக்கான காட்சிகளை முடித்த பிறகே கிளம்பிச் சென்றார். இப்படித்தான் மற்றவர்களும் நன்கு ஒத்துழைத்தனர்," என்கிறார் இயக்குநர் கார்த்திக்.