அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படம் திட்டமிட்டபடி தீபாவளி வேளையில் வெளியாவது மகிழ்ச்சி அளிப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இக்குழு நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது பேசிய படத்தின் நாயகியும் உக்ரேன் நடிகை யுமான மரியா ரியாபோஷாப்கா இயக்குநர் அனுதீப்புக்கும் சிவாவுக்கும் நன்றி தெரிவித்தார்.
"சிவகார்த்திகேயன் நல்ல நடிகர். அவருடன் பணியாற்றுவது மிகவும் எளிமையாக இருந்தது. ஒட்டுமொத்த படக்குழுவும் என் மீது பாசம் காட்டி கவனித்துக் கொண்டது.
"குறிப்பாக, நான் இந்திய நாட்டிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இது மிகவும் அன்பான நாடு. இந்திய குடிமக்கள் எனக்கு நிறைய அன்பைத் தந்திருக்கிறார்கள். இத்திரைப்படம் நல்ல படைப்பாக உருவாகி உள்ளது. மனக்கவலைகளை மறக்க வைக்கும் ஜாலியான திரைப்படம் எனலாம்," என்றார் மரியா. தாம் முழுப் படத்தையும் பார்த்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், தம்மைப் போன்றே எல்லோருக்கும் இப்படம் பிடிக்கும் எனக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, நாயகி மரியாவைப் பற்றி பாராட்டிப் பேசியதுடன், "நான் உங்களைக் காதலிக்கிறேன்," என்று சொல்ல, அரங்கம் சிரிப்பொலியில் மூழ்கியது.
இதற்குப் பதிலளித்த மரியா, "நானும் உங்களை நேசிக்கிறேன் சூரி அண்ணா," என்றார். ஆனால் சூரி விடுவதாக இல்லை.
"டார்லிங்... நான் உன்னைக் காதலிக்கிறேன்," என்று மீண்டும் வற்புறுத்த, மேடையில் அமர்ந்திருந்த சிவகார்த்திகேயன், மரியா காதில் ஏதோ கிசுகிசுத்தார்.
அதன் பிறகு சூரியை நோக்கி, "சூரி சித்தப்பா," என்று மரியா குறிப்பிட, அரங்கில் பலத்த கைத்தட்டல் எழுந்தது.
இதையடுத்து சிவகார்த்திகேயனை அடிப்பதுபோல் பாசாங்கு செய்த சூரி, "தம்பி சிவகார்த்திகேயனை வைத்துக் கொண்டு என்னால் எந்த இடத்திலும் எதையும் செய்ய முடியாது," என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய சிவகார்த்திகேயன், 'பிரின்ஸ்' படத்தில் வன்முறை, ஆபாசம் ஏதும் இல்லை என்றார். மேலும் இப்படத்தில் வில்லன் என்று யாருமே இல்லை என்றும் குறிப்பிட்டார்.
"பணம் கொடுத்து படம் பார்க்க வரும் மக்களை இரண்டரை மணி நேரம் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே மனதிற்கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதை ஒரு புதிய முயற்சி என்றும் சொல்லலாம்.
"ஒரு வெளிநாட்டுப் பெண்ணை தமிழ் பையன் காதலிப்பதுதான் கதை. நகைச்சுவை என்பது மிகவும் கடினமான ஒன்று. அதை சவாலாக ஏற்றுக்கொண்டு வேலை பார்த்தோம். இது முழு நீள தமிழ்ப் படம்தான். அதில் சந்தேகமே தேவை இல்லை.
"கதைப்படி நானும் மரியாவும் ஆசிரியர்களாக நடித்துள்ளோம். இன்றைய உலகச் சூழலில் மனிதாபிமானம்தான் முக்கியத் தேவையாக உள்ளது. அதை இந்தப் படம் வலியுறுத்துகிறது. இந்தப் படமும் வெளியீடு காணும் முன்பே லாபம் பெற்றுத் தந்துள்ளது," என்றார் சிவகார்த்திகேயன்.

