புது இயக்குநர்கள் வித்தியாசமான கதைக்களங்களுடன் தம்மை அணுகுவதாகவும் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது வசதியாக உள்ளது என்றும் சொல்கிறார் சந்தானம்.
ஏற்கெனவே வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநருடன் இணையும்போது ரசிகர்கள் மத்தியில் அந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துவிடுகிறது என்றும் அதற்கேற்ப தாமும் அதிகம் மெனக்கெட வேண்டியுள்ளதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கவுண்டமணியின் தீவிர ரசிகர் சந்தானம் என்பது தெரிந்த விஷயம். இப்போது சென்னையில் கவுண்டமணி குடியிருக்கும் அதே வீதியில் வீடு வாங்கிக் குடியேறி உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் வேலை பார்த்தபோதே 'செனடாஃப்' பகுதியின் மீது தமக்கு ஈர்ப்பு அதிகம் என்று குறிப்பிட்டு்ளள அவர், அப்போதே அந்தப் பகுதியில் வீடு வாங்க வேண்டும் என கனவு கண்டுள்ளதாகச் சொல்கிறார்.
"அது மிகவும் அமைதியான பகுதி. கவுண்டமணி சார் அங்கேதான் வசிக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அண்ணனுடைய தீவிர ரசிகன் நான். சிலமுறை அவரை நேரில் சந்தித்திருக்கிறேன்.
"இப்போது அவரது வீட்டுக்கு அருகிலேயே எனக்கும் வீடு அமைந்திருப்பதில் மகிழ்ச்சி. அவரது கார் ஓட்டுநர் கண்ணில்பட்டால், சார் எப்படி இருக்கிறார்? என நலம் விசாரிப்பேன். அதேபோல் அவரும் என் கார் ஓட்டுநரைப் பார்த்தால் 'என்னப்பா, தம்பி நன்றாக இருக்கிறாரா?' என்று கேட்பார்.
"மீண்டும் நடிக்க வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறேன். கதையும் கதாபாத்திரமும் சரியாக அமைந்தால் அண்ணனுடன் சேர்ந்து நடிப்பேன்," என்று சொல்லும் சந்தானம், அடுத்து, 'ஏஜெண்ட் கண்ணாயிரம்', 'கிக்' ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார்.