கன்னடத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற 'காந்தாரா' திரைப்படம் பிற மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் 'பூத கோல' வழிபாட்டு முறையைப் பற்றி சர்ச்சையான கருத்தைத் தெரிவித்ததால் பிரச்சினையில் மாட்டிக்கொண்டார் படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி.
மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு ஒருவர் பூர்வகுடி மக்களின் நிலத்தை அபகரிக்கத் திட்டமிடுகிறார். அதைத் தெரிந்துகொள்ளும் ஊர் மக்கள் இத்திட்டத்தை முறியடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
கடலோர கர்நாடகமான
உடுப்பியின் கிராமத்தில் நடக்கிறது திரைப்படத்தின் கதை. அப்பகுதி மக்களின் நம்பிக்கைகளில் ஒன்றுதான் இந்தப் 'பூத கோல' ஆட்டம். இதில், தெய்வ வேடம் அணிந்தவர் ஊர் மக்கள் முன்பு நடனமாடி கதை சொல்வார்.
படத்தில் காட்சிப்
படுத்தப்பட்டிருக்கும் 'பூத கோல' ஆட்டம் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. திரைக்கதை எழுதி, இயக்கி, நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி இந்தக் காட்சிகளில் 'பூத கோல' ஆட்டத்தை மிகச் சிறப்பாகக் காட்சிப்படுத்தி
யிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் பத்திரிகைக்குப் பேட்டி அளித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. அதில் "பூத கோல ஆட்டம் இந்து மரபுகளின் ஓர் அங்கம்" எனக் கருத்து தெரிவித்திருந்தது தற்பொழுது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
படத்தில் பூர்வகுடி மக்களைக் காக்கும் பஞ்சுருளி தெய்வம் இந்து கலாசாரத்தைச் சேர்ந்தக் கடவுளாகக் காட்டப்பட்டுள்ளது. இது
குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "அந்தத் தெய்வங்கள் நம் கலா சாரத்தின் ஓர் அங்கம். இவை கண்டிப்பாக இந்து கலாசார
மரபுகளின் கீழ் வருபவைதான்.
"நான் ஓர் இந்து. எனது சமயத்தின் மீது எனக்கு மரியாதையும் நம்பிக்கையும் உண்டு. அதற்காக மற்ற மதத்தினரை
தவறாகச் சொல்ல மாட்டேன். இந்து மதத்தில் பின்பற்றப்படும் மரபுகளைத்தான் நாங்கள் படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறோம்," என்று தெரிவித்திருந்தார்.
ரிஷப் ஷெட்டியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கன்னட நடிகர் சேத்தன் "பூத கோல நடனம் ஆதிவாசிகளின் கலை. அந்தக் கலை மரபை ஆதி
வாசிகள் வழி வழியாக பின்பற்றிவந்திருக்கிறார்கள். இது இந்து சமயத்துக்கு அப்பாற்பட்டது. இந்து சமயம் இந்தியாவில் தோன்றியதற்கு முன்பே ஆதிவாசிகள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள்.
"மேலும் தொடர்ந்து இந்தியையும் இந்து சமயத்தையும் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது,'' என்று பேசியிருந்தார். அதனையடுத்து அவர் மீது கர்நாடக மாநில இந்து அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இத்துடன் 'வராஹ ரூபம்' பாடல் காப்புரிமையை மீறி இயற்றப்
பட்டுள்ளதாக கேரளத்தைச் சேர்ந்த 'தைக்குடம் பிரிட்ஜ்' என்ற இசைக் குழுவும் குற்றம் சாட்டியுள்ளது.
2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த 'தைக்குடம் பிரிட்ஜ்' இசைக்குழு, மலையாள மொழியில் தனிப்பாடல்களை இயற்றி வருகிறது. '96' திரைப்படத்தின் இசை
யமைப்பாளர் கோவிந்த் வசந்தாவும் அவருடைய நண்பர்களும் இக்
குழுவை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு 'நவரசம்' என்கிற பாடலை இக்குழு இயற்றி வெளியிட்டது. யூடியூப்பில் வெளியான இப்பாடலை 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கேரள நடன முறைகளில் ஒன்றான 'தைய்யம்' நடனத்தைப் பற்றிய பாடலாக 'நவரசம்' காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இப்பாடலின் நகல்தான் 'வராஹ ரூபம்' எனக் குற்றம் சாட்டியிருக்கும் தைக்குடம் பிரிட்ஜ் இசைக்குழு புகார் அளிக்கப்போவதாக அறிவித்து இருக்கிறது.
எது எப்படி இருப்பினும் முன்னணி நடிகர்களைவிட கதைக்குத்தான் முதலிடம் என்று நிரூபித்து இருக்கிறது இந்தப் படம்.
சுமார் 17 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு தற்பொழுது 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கன்னடத்தில் அண்மையில் வெளிவந்து வெற்றி பெற்ற 'கேஜிஎஃப்' படத்தை பின்னுக்குத் தள்ளி பிரம்மாண்ட இயக்குநர்களையே தலைசுற்ற வைத்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

