கவர்ச்சியாக நடித்துப் பெயரெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நல்ல நடிகை எனப் பாராட்டு பெறுவதற்கு கவர்ச்சி அவசியம் இல்லை என்றும் சொல்கிறார் நடிகை சாய் பல்லவி.
திரைத்துறையில் அடியெடுத்து வைக்கும்போது, தன் மனத்தில் கணக்கில் அடங்காத பயமும் அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் இருந்ததாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"என்னை சிறந்த நடிகை என்று எல்லாரும் பாராட்டுகிறார்கள். உண்மையில் நான் நடிப்புக்கு என தனிப் பயிற்சி ஏதும் பெறவில்லை. ஒருவேளை அதுதான் எனது பலம் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.
"உண்மையில் என் வீட்டில் எப்படி இருக்கிறேனோ, திரையில்கூட அப்படித்தான் காட்சி அளிக்கிறேன். சாய் பல்லவி நன்றாக நடித்திருக்கிறார், வெளுத்து வாங்கிவிட்டார், கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிவிட்டார் என்றெல்லாம் ரசிகர்கள் பாராட்டும்போது வியப்பாகவும் குழப்பமாகவும் இருக்கும்.
"என் அம்மா அடிக்கடி, 'நீ எங்கே நடித்தாய்? வீட்டில் எப்படி இருக்கிறாயோ அப்படித்தானே இருக்கிறாய்...' என்று சொல்லி ஆச்சரியப்படுவார். அதேபோல் நடனத்துக்கும்கூட சிறப்பு பயிற்சி ஏதும் பெறவில்லை," என்கிறார் சாய் பல்லவி.
குறிப்பிட்ட கதாநாயகனுடன்தான் நடிக்க வேண்டும் என்ற எல்லைகளை தாம் வகுத்துக்கொள்ளவில்லை என்று குறிப்பிடும் இவர், கதை நன்றாக இருந்தால் யாருடன் வேண்டுமானாலும் இணைந்து நடிக்கத் தயார் என்கிறார்.
திரைத்துறையில் உள்ள அனைத்து கதாநாயகர்களுடன் நடிக்க விரும்புவதாகவும் ஒவ்வொருவரிடமும் தனித்திறமைகள் இருப்பதாகவும் சொல்கிறார்.
"அனைத்து கதாநாயகர்களிடம் மரியாதை வைத்துள்ளேன். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுடன் ஒரு படத்தில்கூட நடித்ததில்லை. அவரது நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
"அதேபோல் மகேஷ்பாபு திரையில் வரும்போது வெகுவாக ரசிப்பேன். ஆண்கள்கூட இவ்வளவு அழகாக இருப்பார்களா? என்று அவரை பார்க்கும் போதெல்லாம் அதிசயித்துப் போகிறேன்.
"ஒட்டுமொத்தத்தில் பார்க்கும்போது எனக்கு எப்போதும் பிடித்தமான கதாநாயகன் சூர்யா. அவரோடு நடித்த எல்லா காட்சிகளுமே எனக்கு மிகவும் பிடித்தவைதான்.
"என்னைப் பொறுத்தவரை நான் அழகான பெண் அல்ல. என் முகம் எல்லாம் பருக்கள் இருக்கும். எனக்கு கதாநாயகியின் அம்சம் இல்லை என்று நினைப்பேன். திரையில் பார்க்கும்போது ரசிகர்களால் என்னையும் எனது நடிப்பையும் ரசிக்க முடியுமா? எனக்கு இந்த சினிமாத் துறை இடம் கொடுக்குமா? என்று பலவிதமாக யோசிப்பேன்.
"அதற்குக் காரணம் இருந்தது. நான் திரைத்துறைக்கு வந்தபோது அதுவரை பார்த்த கதாநாயகிகள் எல்லோருமே அழகானவர்கள். அவர்களோடு ஒப்பிடும்போது நான் ஒன்றுமில்லை என்று தோன்றியது.
"அதனால் 'பிரேமம்' மலையாளப் படத்தில் அறிமுகமானபோது, அதன் இயக்குநரிடம், 'உங்கள் கதாபாத்திரத்திற்கு நான் சரியானவள்தானா? பாதிப் படப்பிடிப்பு முடிந்ததும் என்னை நீக்கிவிட மாட்டீர்களே' என்று நூறு முறையாவது கேட்டிருப்பேன்.
"ஆனால் அந்தப் படம் வெளியீடு கண்ட பிறகு திரையரங்கத்துக்குச் சென்று பார்த்தபோது, பெரும்பாலான ரசிகர்கள் படம் முடிந்தவுடன் எழுந்து நின்று கைதட்டினார்கள். எனக்கென்று சினிமாத்துறையில் ஓர் இடம் கிடைத்திருக்கிறது என்று அன்றே எனக்குத் தோன்றியது. அதன் பிறகு தன்னம்பிக்கையும் அதிகரித்தது," என்கிறார் சாய் பல்லவி.
தனது உடற்கட்டை கச்சிதமாக வைத்திருந்தாலும் சாய் பல்லவி உடற்பயிற்சி ஏதும் செய்வதில்லையாம். சைவ உணவு மட்டுமே சாப்பிடுகிறார். பருப்பு, ரசம் சாதம் என்றால் ரொம்பப் பிடிக்கும் என்றும் படப்பிடிப்பின்போது மோர், இளநீர் மட்டுமே பருகுவதாகவும் சொல்கிறார்.
"ஓய்வாக இருந்தால் பேட்மின்டன் விளையாடுவேன். அவ்வளவு எளிதில் என் உடல் எடைகூடாது. உடல் பருமனும் ஏற்படாது.
"அதனால் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் இல்லை. சமூக ஊடகங்களில் நேரம் செலவிடுவதில்லை. அதனால் எந்தப் பயனும் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.
"அதே சமயம் நாட்டு நடப்புகள் தொடர்பான முக்கியமான, அண்மைய தகவல்கள் ஏதும் இருந்தால், என் தங்கை விவரம் தெரிவிப்பார். அதன் பிறகு இணையத்திலோ, தொலைக்ககாட்சியிலோ செய்திகளைப் பார்த்து விவரங்களைத் தெரிந்துகொள்வேன்," என்கிறார் சாய் பல்லவி.
பெண்கள் தாழ்வு மனப்பான்மையை ஒதுக்கி வைத்துவிட்டு விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்து பவர், வெற்றி தோல்விகள் குறித்து கவலைப்படக்கூடாது என்றும் ஒரு கட்டத்தில் வெற்றி தன்னால் கைகூடும் என்றும் சொல்கிறார்.
தற்போது தமிழிலும் தெலுங்கிலும் தலா இரண்டு புதுப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சாய் பல்லவி. அவற்றுள் இரண்டு படங்கள் நாயகியை மையப்படுத்தும் கதைக் களங்களைக் கொண்டவையாம்.
, :

