தமிழகத்தில் வாடகைத் தாய் குறித்த விவாதங்கள் நடந்து வரும் நிலையில், சமந்தா நடிப்பில் அடுத்து வெளிவரப்போகும் 'யசோதா' படமும் வாடகைத்தாய் விவகாரத்தை மையப்படுத்தி உருவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது நேரடித் தெலுங்குப் படமாக உருவாகி உள்ளது என்றாலும் ஒரே சமயத்தில் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியீடு காணுமாம். மேலும், இந்தியா முழுவதும் உள்ள திரை ரசிகர்களைக் கவரும் வகையில் கதை, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக இப்படத்தை இயக்கி உள்ள இரட்டை இயக்குநர்களான ஹரி, ஹரிஷ் கூறுகின்றனர்.
இப்படத்துக்கு மணிசர்மா இசையமைக்க எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பை தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, தமிழில் சூர்யா, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டனர்.
ஒரு கோடீஸ்வர பெண்ணுக்கு வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுக்கிறார் சமந்தா. ஆனால், இதற்கு ஏற்பாடு செய்து தனியார் மருத்துவமனை அவரை மோசடி செய்கிறது. அந்த மருத்துவமனையை எதிர்த்து சமந்தா போராடிச் சாதிப்பதுதான் கதையாம்.

