தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள சமந்தாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் நடித்திருக்கும் 'யசோதா' படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியானது. அதற்குப் பலரும் அளித்த வரவேற்பில் மகிழ்ந்த சமந்தா, "நான் கையில் மருந்து ஏற்றிக்கொண்டே இந்தப் படத்திற்கு குரல் கொடுத்து வருகிறேன்," என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவிற்கு என்ன ஆனது? என்ற கவலையில் மூழ்கினர்.
அது சம்பந்தமாக நடிகை சமந்தா சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் சென்றிருப்பதாக செய்திகள் வெளியாயின.
நடிகை சமந்தா சூர்யாவின் 'அஞ்சான்' படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு சருமப் பிரச்சினை இருந்ததாகவும் அதனால் அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது. அந்த பிரச்சினை மீண்டும் வந்திருப்பதாகவும் அதனால் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை சமந்தா தனக்கு என்ன பிரச்சினை என்பதை வெளிப்படையாகத் தனது இன்ஸ்டகிராம்
பக்கத்தில் தெரிவித்துள்ளார். "நான் நடித்த 'யசோதா' திரைப்படத்திற்கு அமோக ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"நான் 'மயோசிட்டிஸ்' எனப்படும் சருமப் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். இந்தப் பிரச்சினையிலிருந்து நான் முழுவதும் மீண்ட பிறகு இதுகுறித்து பதிவு செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட சிகிச்சை முடிய அதிக நாள்கள் ஆகும் என்
பதால் இப்போது நான் இதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
"நான் தற்பொழுது மெதுவாகக் குணமாகிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாதிப்பை ஏற்றுக்கொண்டு, சிகிச்சையைப் போராடி வெற்றி பெறுவதும் அவசியமான ஒன்றாக
கருதுகிறேன். நான் விரைவில் பூரண குணமடைந்து விடுவேன் என்று மருத்துவர்கள் எனக்கு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். அனைவருக்கும் நல்ல நாள்களும் கெட்ட நாள்களும் வரும் என்பதுபோல் எனக்கும் அதைப்போல வந்திருக்கிறது என்பதை நான் உணர்கிறேன்.
"உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் ஒவ்வொரு நாளையும் கடினமாக கழிக்க வேண்டி இருக்கிறது. ஆனாலும் நான் குணமடையும் நாளை நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன்," என்று பதிவிட்டு உள்ளார்.
இந்தப் பதிவை அடுத்து நடிகை சமந்தாவுக்கு என்ன பிரச்சினை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரது உடல் நலம் குறித்து அனைத்து வதந்திகளுக்கும் முடிவு கட்டப்பட்டு விட்டதாகக்
கருதப்படுகிறது.
இதற்கிடையில் 'யசோதா' படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நவம்பர் மாதம் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனால், அவர் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே படங்களுக்கு குரல் பதிவு செய்து வருகிறார். அதைக் கேள்விப்பட்டதில் இருந்து அவருடைய ரசிகர்கள் சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
'யசோதா' படத்தில் அமைதியான அன்பான கர்ப்பிணியாகவும் அதேசமயம் ஆக்ரோஷமாக அடி
தடியில் இறங்கும் பெண்ணாகவும் சமந்தா நடித்துள்ளார்.
அவருடைய நடிப்பு இந்தப் படத்தில் வித்தியாசமாக இருக்கும் என்று கூறுகின்றனர் படக்குழுவினர். சதி செய்யும் மருத்துவமனையின் உரிமையாளராக வரலட்சுமி சரத்குமார் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

