'சவரக்கத்தி' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஜி.ஆர்.ஆதித்யா. இப்போது 'டெவில்' என்ற தலைப்பில் புதுப் படத்தை இயக்கி வருகிறார்.
மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர், இப்போது தனது குருவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்த உள்ளார்.
அதென்ன... 'டெவில்'?
"தலைப்பைக் கேட்டதும் இது பேய்ப்படம் என்று நினைக்கத் தோன்றும். உண்மையில் மனித மனம்தான் பேய். நிஜப் பேய்கள் நம்மை ஒன்றுமே செய்யாது.
"இப்போதெல்லாம் மனிதர்கள்தான் பேய்போல் நடந்துகொள்கிறார்கள். எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு 'டெவில்' இருக்கிறது. அதனை மையப்படுத்தியதுதான் இப்படம்," என்கிறார் ஆதித்யா.
திகில் உச்சத்தைத் தொடும் படங்களுக்கான பட்டியலில் 'டெவில்' படமும் இடம்பெறும் என்று நம்பிக்கையுடன் குறிப்பிடுபவர், ஒவ்வொரு ரசிகரையும் மிரள வைக்கும் படைப்பை உருவாக்கி உள்ளதாகச் சொல்கிறார்.
"பெண்கள்தான் உலகின் மிகப்பெரிய சக்தி. ஆனால், அந்தச் சக்தி என்னவென்று அவர்களுக்கே தெரியவில்லை. அதை உணர்த்துவதுதான் 'டெவில்' படத்தின் ஒருவரிக் கதை.
"நாயகனாக விதார்த், நாயகியாக பூர்ணா நடித்திருக்கிறார்கள். விதார்த் வழக்கறிஞராக வருகிறார். அர்ப்பணிப்போடு நடிக்கக்கூடிய கலைஞர். பூர்ணாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
"ஏற்கெனவே ஒரு படத்திற்காக மொட்டை அடித்துக்கொண்டவர். எந்த நடிகை தன் முடியை இப்படித் தியாகம் செய்ய முன்வருவார்?
"பூர்ணா நடித்தால் நம் கதைக்கு ஒரு நல்ல பரிணாமம் கிடைத்துவிடும். இப்படத்திற்காக, அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவர்களுடன் இன்னொரு நாயகனாக ஆதித் அருண் நடித்துள்ளார். மிஷ்கின் சாரும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அதுகுறித்து அதிகம் சொல்ல இயலாது.
"மிஷ்கின் சாரின் இசை ஆர்வத்தையும் ஞானத்தையும் சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறேன். மேற்கத்திய இசை தொடர்பான விருப்பமும் ஆழ்ந்த அறிவும் அவருக்கு இருக்கிறது. பாடல்களை என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தந்துள்ளார். மேலும், நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் உண்டு. அதற்கு, மிஷ்கின் சார் இசையமைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். கதையைக் கேட்டதுமே இசை அமைக்க சம்மதித்துவிட்டார்," என்கிறார் ஆதித்யா.


