'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தில் சந்தானத்தை ரசிகர்கள் இதுவரை பார்க்காத கோணத்தில் காட்ட முயற்சி செய்திருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் மனோஜ் பீதா.
இந்தப் படத்தில் ஏஜெண்ட் கண்ணாயிரமாகத்தான் தெரிவாரே தவிர சந்தானமாக தெரிய மாட்டார் என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இது சமயங்களுடன் தொடர்புடைய ஒரு பிரச்சினையை மையமாக வைத்து உருவாகி உள்ள படம். ஒரு வகையில் துப்பறியும் கதை என்று சொல்லலாம்.
"ஆனால் எந்தவொரு சமயத்தையும் குறிப்பிட்டு படத்தை எடுக்க வில்லை. மேலும், ஒரு தாய்க்கும் மகனுக்குமான பாசப் பிணைப்பையும் இந்தப் படம் முழுமையாக அலசும்.
"அதேசமயம் நகைச்சுவை, அடிதடி, காதல் உள்ளிட்ட வணிக அம்சங்களையும் குறைவின்றிச் சேர்த்துள்ளோம். ஆனால் எதுவுமே வலிய திணிக்கப்பட்டதாக இருக்காது. சந்தானத்தின் திரைப்பயணத்தில் இது மிக முக்கியமான படமாக இருக்கும்.
"இது சந்தானம் நடிக்கும் வழக்கமான நகைச்சுவைப் படம் அல்ல. அவரது அதிரடி வசனங்கள் ஏதும் இருக்காது. வழக்கமான காதல் காட்சிகளையும் ரசிகர்கள் எதிர்பார்க்க வேண்டாம்," என்கிறார் இயக்குநர் மனோஜ்.

