தயாரிப்பாளர் கே.ராஜன் நேர்காணல் ஒன்றில், "தமிழ் சினிமாவில் விஜய் முன்னணி நடிகர் என்பதற்கு மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனால், அவருக்குத் தெலுங்கில் வாய்ப்புகள் குறைவு. அவரைவிட சூர்யாவுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம். அப்படி இருக்கும்போது தெலுங்குப் படத் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் வாய்ப்பு கொடுத்து விஜய் பெரிய தவறு செய்துவிட்டார்.
"தெலுங்குத் திரையுலகம் தயாரிப்பாளர், விநியோகிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், தமிழ்த் திரையுலகில் அதுபோன்ற எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது.
"தெலுங்குத் திரையுலக நடிகர்கள்தான் வெற்றி பெறவேண்டும் என்று அவர்கள் நினைப்பதில் தவறு இல்லை.
"பொங்கலுக்கு பவன் கல்யாண், பாலகிருஷ்ணா படங்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' படத்திற்கு ஒரு சில திரையரங்குகளை மட்டுமே ஒதுங்கியுள்ளது தெலுங்குத் திரையுலகம்.
"ஆனால், தமிழகத்தில் தயாரிப்பாளர் சங்கம் சரியில்லை. வேறு மொழிகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட 'பாகுபலி', 'கேஜிஎஃப்' போன்ற படங்களுக்கு திரையரங்குகளை வாரி வழங்குகிறார்கள். வந்தாரை வாழவைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இங்கு இருப்பவர்களை வாழவிடமாட்டேன் என்கிறார்கள்.
"நடிகர் விஜய் தனது சம்பளத்தை ரூ.125 கோடி வரை ஏற்றியிருப்பது தயாரிப்பாளருக்குச் செய்யும் பெரிய துரோகம். அதனால், அவர் தனது மதிப்பைப்
பெரிதுபடுத்த நினைக்கிறார். ஆனால், தமிழ் இயக்குநருக்கும் தமிழ் தயாரிப்பாளருக்கும் லாபம் கிடைக்கும் வகையில் அவர் செயல்பட வேண்டும். அப்படி விஜய் செய்யவில்லை. அதன் பலனைத்தான் 'வாரிசு' படத்தின் மூலம் அனுபவிக்க காத்திருக்கிறார்," என்று தயாரிப்பாளர் குற்றம் சாட்டி காரசாரமாக பேசியுள்ளார். இவருடைய பேச்சு தற்பொழுது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், கமல்ஹாசன் தயாரித்து நடித்த 'விக்ரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக மீண்டும் விஜய்யை வைத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கப் போகிறார்.
அந்தப் படத்தை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்' நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ்' தயாரிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
தனது முந்தைய படங்களின் கதா பாத்திரங்களை புதிய படங்களில் இணைத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.இந்தப் படத்திலும் 'விக்ரம்' படத்தில் கமல் நடித்த கதாபாத்திரமும் இடம்பெறுவதோடு, கமல்ஹாசனும் கௌரவத் தோற்றத்தில் விஜய்யுடன் நடிப்பார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

