சில படங்கள் குறைந்த செலவில் எடுக்கப்பட்டாலும், பல கோடிகள் வசூலித்துக் கொடுக்கும். உடனே இது அதிர்ஷ்டத்தால் கிடைத்த வெற்றி என்பார்கள். ஆனால் மக்கள் விரும்பும் அம்சங்களை சரியான கலவையில் கொடுத்துள்ளனர் என்பதே உண்மைக் காரணமாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களில் அண்மைய வெளியீடான 'லவ் டுடே' வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் இந்த வெற்றிக்குப் பிறகு மிகுந்த அடக்கத்துடன் அடுத்த கட்ட நகர்வு குறித்து அமைதியாக யோசித்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். நகைச்சுவையும் யதார்த்தமும் கலந்து சொல்லப்பட்ட கதை என்பதால் ரசிகர்களின் ஆதரவுடன் தயாரிப்புத் தரப்புக்குப் பல கோடிகளை பெற்றுத் தந்துள்ளது 'லவ் டுடே' திரைப்படம்.
"பொதுவாக ஒரு மனிதனை நன்றாகச் சிரிக்க வைப்பது மிக கடினமான வேலை. சிரிப்புடன் நல்ல கருத்துகளைச் சொல்லி, அவற்றையும் புரிய வைத்தால்தான் வெற்றிபெற முடியும். இதுபோன்ற கதைகள் அனைத்தும் ஏற்கெனவே சொல்லப்பட்டுவிட்டது என்றுதான் எல்லாருமே நினைக்கிறார்கள்.
"எனவே இந்தக் கதைகளைச் சொல்லும் முறையில்தான் வித்தியாசம் தேவைப்படுகிறது. நான் எந்தவொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்தும்போது அதிகம் யோசிப்பேன். புதிதாக ஏதாவது சொல்ல வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருப்பேன். எனக்கு ஓசைகளில் கைத்தட்டல்தான் மிகவும் பிடிக்கும்.
"நல்ல கதைக்கான கரு என்பது ஒரு வரியில்கூட கிடைக்கும். அதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பதை அதைப் பின்தொடர்ந்தால்தான் தெரியும். அதன் பிறகு அதை அழகாக முடிக்க முடியுமா என்று யோசிப்பேன். 'லவ் டுடே' படத்தை நானே இதற்கு முன்பு குறும்படமாக இயக்கியுள்ளேன். அது என்னிடம் பத்திரமாக உள்ளது. பொழுதுபோக்கும் நகைச்சுவையுமாக ஒரு நல்ல செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி செய்தேன். அதற்குத்தான் பாராட்டு கிடைத்துள்ளது," என்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
இந்தப் படம் செய்த முதலீட்டுக்குரிய வசூலைத் தரும் என்று மட்டுமே நினைத்தாராம். ஆனால் மக்கள் கூடிக்கூடி சேர்ந்து ரசித்துப் படம் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லையாம்.
"எப்படியோ மக்களின் ரசனையைத் தொட்டுவிட்டேன். அதுதான் வசூலைவிட அதிக மகிழ்ச்சி தருகிறது. ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டனர் என்பதை நினைத்து நெகிழ்ந்து போயுள்ளேன். இந்த வெற்றியை அடிப்படையாக வைத்துக்கொண்டு அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்ல வேண்டும்.
"என் வாழ்க்கையில் நான் ஆசைப்பட்ட பல விஷயங்கள் நடந்துள்ளன. புதிய களம், புதிய நடிகர்கள் என தமிழ்நாட்டை எல்லோரும் கவனிக்கிறார்கள். கதை அம்சத்திற்கும் வித்தியாசத்திற்கும் உணர்வுக்கும் மதிப்பளிக்க ஆரம்பித்து விட்டார்கள். இளையர்களுக்கு வழி பிறந்துவிட்டது என சொல்லத் தோன்றுகிறது. அந்த வகையில் இந்த வெற்றியைக் கொண்டாடுகிறேன்," என்கிறார் பிரதீப்.

