செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
ea76423b-6b50-4ab0-b03c-13d8ebbaa880
-
multi-img1 of 3

இயக்குநர் சந்தோஷ் ராஜன் எழுதி, இயக்கி இருக்கும் படம் 'வரலாறு முக்கியம்'. இந்தப் படத்தில் நடிகர் ஜீவா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். 'சூப்பர் குட் பிலிம்ஸ்' சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி தயாரித்துள்ள இப்படத்திற்கு 'ஜிமிக்கி கம்மல்' பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைத்திருக்கிறார். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், இந்தப் படம் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று குறிப்பிட்டு சுவரொட்டியை வெளியிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர்.

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து விட்டதாக செய்திகள் வெளியாயின. இதனால் தனுஷ் நொந்து போயிருக்கிறாராம். ஐஸ்வர்யா தரப்பிலிருந்து இந்த இணைப்பை விரும்புகிறார்கள் என்பது உண்மை. தனுஷ் தரப்பிலிருந்து இதற்கான எந்த ஆதரவும் இல்லையாம். அதிகமான படங்களில் தொடர்ந்து நடிப்பததுதான் இதற்கு மாற்று என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் தனுஷ். எனவே அவர் வரிசையாக நான்கு படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தெலுங்குத் திரையின் முன்னணி இயக்குநராக இருப்பவர் குணசேகர். இவர் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள நிலையில் தற்பொழுது காளிதாசர் எழுதிய புராணக் கதைகளில் ஒன்றான 'சாகுந்தலம்' எனும் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்க இருக்கிறார். அந்தப் படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் ,இந்தப் படத்தில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், அஜித் இருவருமே அதிகமாக வெளியிடங்களுக்குச் செல்வதில்லை. பத்திரிகையாளர்களோடு எந்தப் பேச்சுவார்த்தையும் தொடர்பும் இல்லாதபடி பார்த்துக் கொள்கிறார்கள். அஜித் வெளி உலகில் சரளமாக வந்து போகாமல் இருப்பது அவருக்கு புகழ் கூடுவதாகக் கருதிக் கொண்டு விஜய், தனுஷ் போன்றவர்களும் அதையே கடைப்பிடிக்கிறார்கள். இதில் இப்போது புதிதாக சூர்யாவும் சேர்ந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இந்தி பட உலகில் முன்னணி நடிகர்களான சல்மான், ஷாருக் போன்றவர்கள் அவர்களின் பட வெளியீட்டின்போது மக்களைச் சந்திக்கிறார்கள் என கோலிவுட்டில் முணுமுணுக்கிறார்கள்.

அல்போன்ஸ் புத்திரன் ஏழு ஆண்டுகள் கழித்து தற்பொழுது 'கோல்டு' என்ற படத்தை இயக்குகிறார். இதில் பிரித்திவிராஜும் நயன்தாராவும் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில், இப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருக்கின்றனர்.

அமலாபால் மலையாளத்தில் நடிக்கும் 'தி டீச்சர்' படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மையில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஹக்கிம் ஷாஜகான், செம்பன் வினோத், அனு மோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அமலா பால் நடித்த படங்கள், இணையத் தொடர்கள் பல 'ஓடிடி' தளங்களில் தொடர்ந்து வெளியானது. இந்நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு இவருடைய 'தி டீச்சர்' படம் திரையரங்கில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்போடு காத்திருக்கிறார்கள். தமிழில் வெளியான 'கைதி' படத்தின் இந்தி மறுபதிப்பில் அமலா பால் நடிக்கிறார். அந்தப் படத்தை அஜய் தேவ்கான் நடித்து, இயக்குகிறார்.