கடந்த 2016ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடப் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. அதன் பின்னர் அவர் நடித்த பல படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற்றன.
இதையடுத்து, முன்னணி நாயகியாக வளரத் தொடங்கிய வேளையில் அவருக்கும் 'கிரிக் பார்ட்டி' படத்தில் இணைந்து நடித்த ரக்ஷித் ரெட்டிக்கும் இடையே காதல் மலர்ந்தது. அது திருமணத்தில் முடியும் முன்பு மனம் மாறிவிட்டார் ராஷ்மிகா.
இதன்பிறகு தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், தாம் அறிமுகமான கன்னடப் படம் குறித்து அதிகம் பேசுவதைத் தவிர்த்தார் ராஷ்மிகா. மேலும், ரக்ஷித் ரெட்டியின் நிறுவனப் பெயரையும் பேட்டியில் எந்த இடத்திலும் அவர் குறிப்பிடவில்லை.
கூடுமானவரை கன்னடம் தவிர்த்து பிறமொழி படங்கள் குறித்தும் கதாநாயகர்கள் பற்றியும்தான் அதிகம் பேசினார் ராஷ்மிகா. இது கன்னடத் திரையுலகத்தினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் இவ்வாறு புறக்கணிப்பது மிக மோசமான போக்கு என்று கன்னட திரையுலகத்தைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ராஷ்மிகாவுக்கு தடை விதிப்பது என்ற யோசனையை பரிசீலித்து வருவதாகத் தகவல்.
அடுத்து, 'வாரிசு', 'புஷ்பா-2' ஆகிய இரு படங்கள் ராஷ்மிகா நடிப்பில் வெளியாக உள்ளன. அந்தச் சமயத்தில் தடை குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மன்னிப்பு கோரி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ராஷ்மிகாவுக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
ஆனால், அவரோ இந்த ஆலோசனையை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
"நான் யாரையும் ஒதுக்கி வைக்கும் நோக்கத்தோடு பேட்டி அளிக்கவில்லை. கேட்ட கேள்விகளுக்குத்தான் பதில் அளித்துள்ளேனே தவிர, வேறு எதையும் கூடுதலாகவோ குறைவாகவோ பேசவில்லை," என்கிறாராம் ராஷ்மிகா.

