ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரங்களில் முக்கியமானது, முதன்மையானது என்கிறார் இயக்குநரும் நடிகருமான சசிகுமார்.
எனவே ஜல்லிக்கட்டு கலாசாரம் என்பது தமிழர்கள் மத்தியில் எப்போதுமே இருக்கவேண்டும் என்றும் அது மிகவும் அவசியம் என்றும் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார், பார்வதி அருண் நடித்துள்ள 'காரி' படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்தப் படத்தின் முதல் காட்சியை மதுரையில் ஜல்லிக்கட்டு வீரர்களுடன் பார்க்கப் போவதாக நாயகன் சசிகுமார் கூறியிருந்தார்.
அதன்படி, மதுரையில் உள்ள திரையரங்கில் அவர் ஜல்லிக்கட்டு வீரர்களுடன் படம் பார்த்தார். முன்னதாக, சில வீரர்கள் ஜல்லிக்கட்டு காளைகளையும் கொண்டு வந்திருந்தனர். அவற்றை சசிகுமார் வழிபட்டு பின் படம் பார்த்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு வீரர்கள்தான் உண்மையான கதாநாயகர்கள் என்றார்.
"வீரர்களுடன் படம் பார்த்ததும் ரசிகர்களின் வரவேற்பும் உற்சாகம் அளிக்கிறது. இது ஜல்லிக்கட்டுடன் தொடர்புடைய படம்தான். இதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாள்களாக இருந்து வந்தது.
"சில காரணங்களால் முன்பு இப்படி நடிக்க முடியவில்லை. இயக்குநர் ஹேமந்த் அருமையான படத்தை தந்துள்ளார். நான் எதிர்பார்த்ததைவிட படம் சிறப்பாக வந்துள்ளது," என்றார் சசிகுமார்.
இந்தப் படத்துக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்மையாகவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்தனராம். அதனால்தான் அனைத்து காட்சிகளும் இயல்பாக அமைந்துள்ளது என்கிறார்.
"பொங்கல் கொண்டாட்டம் நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இந்த படம் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும்.
"ஜல்லிக்கட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை எல்லாம் நாம் கடந்து வருவோம். அனைத்தையும் தாண்டி ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுவோம்,
"எனக்கு மட்டுமல்ல, ஜல்லிக்கட்டை உயிராக நேசிக்கும் எல்லாருக்கும் சேர்த்துதான் இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம்," என்றார் சசிகுமார்.
தம்மால் கிராமத்து கதைகளைப் புறக்கணிக்க இயலாது என்று குறிப்பிட்ட அவர், பிற கதைக்களங்களிலும் தொடர்ந்து நடிக்கப் போவதாகத் தெரிவித்தார்.
"ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம். அது மிக அவசியமானது. அதை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மாடுகளை தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். இதை யாரும் தப்பாகச் சொல்லாதீர்கள்.
"இந்தப் படத்திலும் அந்த விவரங்களைப் பதிவு செய்துள்ளோம். ஜல்லிக்கட்டின் அவசியம் குறித்து விரிவாகப் பேசி உள்ளோம். அடுத்த மார்ச் மாதம் முதல் மீண்டும் திரைப்படங்களை இயக்க விரும்புகிறேன்," என்றார் சசிகுமார்.
'காரி' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி.

