'செம்பி' என்ற பத்து வயது சிறுமிக்கும் அவளுடைய பாட்டிக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை 'செம்பி' படத்தில் பதிவு செய்துள்ளார் பிரபு சாலமன்.
இயற்கையுடன் இணைந்து, யதார்த்தமான படைப்புகளைத் தரக்கூடிய இயக்குநர்களில் ஒருவர். வசூல் குறித்து கவலைப்படாமல், ரசிகர்கள் மனதில் தனது படங்கள் தனி இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அதிகம் மெனக்கெடும் படைப்பாளி என்று திரையுலக விவரப்புள்ளிகள் பாராட்டுகின்றனர்.
"மலைவாழ் கிராமங்களில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள், வெள்ளந்தியான மனிதர்கள். அப்படி இருக்கும் ஒரு பாட்டியும் பேத்தியும் இன்றைய நவீன உலகத்துக்குள் வரும்போது அவர்கள் எப்படி நிராகரிப்படுகிறார்கள், அவர்களால் அதை எப்படி எதிர்கொள்ள முடிந்தது, பிறகு எப்படி எல்லோரும் துணையாக நின்றார்கள் என்பதுதான் 'செம்பி'.
"இதில் பேருந்து ஒன்றை சமூகமாக உருவகப்படுத்தி உள்ளேன். மொத்தம் 24 பயணிகள். ஒவ்வொருவரும் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்கள். அவர்கள் அனைவருமே நம் சமூகத்தைப் பிரதிபலிக்கக் கூடியவர்கள்.
"தொடக்கத்தில் எதிராக நின்றவர்கள் எப்படி ஆதரவாளர்களாக மாறுகிறார்கள் என்பது திரைக்கதை.ஒட்டுமொத்தமாக எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என்பதுதான் 'செம்பி'. இந்தப் படத்தை கதையாகச் சொல்ல முடியாது. உணர்வுகளின் கோர்வைதான் படம். எல்லாத் தருணங்களையும் முத்து மாலை கோர்ப்பதுபோல் கோர்த்துள்ளேன்," என்கிறார் பிரபு சாலமன்.
இந்தப் படத்தில் வீரத்தாய் என்ற மலைவாழ் மூதாட்டியாக நடிக்கிறார் கோவை சரளா. மலைவாழ் மூதாட்டியாக நடிப்பவர், உண்மையாகவே அந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தாராம். எனவே, கொல்லிமலை, பச்சைமலை, கல்வராயன் மலை, கொடைக்கானல் என்று ஏறாத மலை இல்லை என்று சொல்லும் அளவுக்கு தேடி அலைந்திருக்கிறார்.
"அதே மாதிரி செம்பி குழந்தைக்காகவும் அலைந்தேன். தேடல் அதிகமானதால் காலம் கருதி தேர்ந்த நடிகைகளை வைத்து எடுக்க முடிவு செய்தேன். அப்போது மனதில் நின்றவர் 'சதிலீலாவதி' கோவை சரளா. கமல் சாருடன் போட்டி போட்டு நடித்திருப்பார்.
"சிறந்த நகைச்சுவையாளர்தான் சிறந்த நடிகராகவும் இருக்க முடியும். அப்படி சார்லி சாப்ளின், பால் நியூமன் போன்றவர்களைச் சொல்லலாம். சரளா மேடத்திடம் கதை சொல்லி, நிறம், தோற்றம், உடல்மொழி என்று மாற்றங்கள் செய்து பழங்குடிப் பெண்ணாக உருமாற்றம் செய்தேன். அவருடன் வேலை செய்யும்போதுதான் கவனித்தேன். அவரிடம் உள்ள மன உறுதியும் சக்தியும் வியப்பை ஏற்படுத்தின. சிறந்த நகைச்சுவையாளருக்குள் ஒரு நடிகன் இருக்க முடியும் என்பது அவருடன் வேலை செய்யும்போது தெரிந்தது.
"ஒருசில இடங்களில் நான் எதிர்பார்க்காத அளவுக்கு நடித்தார். நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த படக்குழுவினரும் கைதட்டி ரசித்தோம்.
"தெளிதேன் எடுக்கும் ஒரு காட்சி. பெரிய பள்ளத்தாக்குப் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த இடத்துக்கு காடுமேடுகளைக் கடந்து வரவேண்டும். துணிச்சலாக தேன் எடுக்கும் காட்சியில் நடித்தார்.
"நிலா என்ற குழந்தை செம்பியாக அசத்தி உள்ளார். அவினாசியைச் சேர்ந்த சிறுமி. சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமான நிலாவும் கோவை சரளாவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடித்திருப்பது இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம்.
"தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா உட்பட 24 கதாபாத்திரங்கள் உள்ளனர். படத்தின் முன்னோட்ட காட்சித் தொகுப்பை கமல் பார்த்தார். அடுத்த நிமிடமே சரளா மேடத்தைப் பார்த்து 'நடிப்பு ராட்சசி' என்ற பட்டம் கொடுத் தார்," என்கிறார் பிரபு சாலமன்.

