'கண்களால் கைது செய்' படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் பிரியாமணி. அதன் பிறகு இருபது ஆண்டுகள் கடந்தோடிவிட்டன.
திரையுலகம் குறித்து எதுவுமே தெரியாத நிலையில், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜாதான் தமக்கு அனைத்து நெளிவு சுளிவுகளையும் கற்றுத் தந்ததாகச் சொல்கிறார்.
"எனது இயற்பெயர் பிரியா மட்டும்தான். சினிமாவுக்காக மணி என்பதும் சேர்ந்து கொண்டது. அந்தச் சமயத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய கதாநாயகிகள் அனைவருக்கும் 'ஆர்' வரிசையில் பெயர் சூட்டுவார். ராதிகா, ராதா, ரதி என்று எல்லாருமே முன்னணி நாயகிகளாக உயர்ந்தனர். அதனால் எனக்கும் 'ஆர்' வரிசையில் பெயர் வைக்கச் சொல்லிக் கேட்டேன்.
"அது மட்டுமல்ல, என் அப்பா பெயரையும் சேர்த்து நானே ரித்திகா மணி என்று ஒரு பெயரையும் தேர்வு செய்து வைத்திருந்தேன். ஜோதிடர்களிடம் ஆலோசனை செய்த பிறகே அந்தப் பெயரை வைத்துக்கொள்ள விரும்பினேன்.
"இதுபற்றி பாரதிராஜா சாரிடம் விவரம் தெரிவித்தபோது, 'உன்னுடைய இயற்பெயரே நன்றாக உள்ளது. வேண்டுமானால், பிரியா மணி என்று வைக்கலாமே' என்றார். எனக்கும் அது மிகவும் பிடித்துப்போனது," என்று தமது பெயர் ரகசியத்தை உடைக்கிறார் பிரியாமணி.
நடப்பு சங்கதிகளுக்கு வருவோம்.
பிரியா நடித்து வரும் 'DR.56' படத்தில் அவருக்கு சிபிஐ அதிகாரி வேட மாம். மருத்துவத்துறையில் நிகழும் பல்வேறு குற்றச்செயல்களை வெளிச்சம்போட்டுக்காட்டும் பரபர துப்பறியும் கதை.
இப்படத்தின் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. அதைப் பார்த்த ரசிகர்கள், பிரியா மிகவும் மிடுக்காக, அழகாக இருப்பதாக வர்ணித்துள்ளனர்.
"சிபிஐ அதிகாரி என்றாலே ஒருவித மிடுக்கு வந்துவிடுகிறது. நமக்குள் ஒருவித ரசாயன மாற்றம் ஏற்படும். ஏதோ நாம் பிறக்கும்போதே அதிகாரியாக இருந்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.
"இப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் ஆனந்த் லீலா கதை சொல்லும்போதே காட்சி அமைப்புகளைக் கேட்டு வியந்து போனேன். கன்னடம், தமிழ் என இரு மொழிகளிலும் படமாக்கி உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு நான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களில் இதுவும் ஒன்று. இதில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகள் ரசிகர்களை அசரவைக்கும். அந்தக் காட்சிகளில் நடிப்பதற்காக மிகவும் மெனக்கெட்டேன். சிறப்புப் பயிற்சியும் மேற்கொண்டேன்," என்கிறார் பிரியாமணி.
திருமணத்துக்குப் பிறகும் தம்மால் தொடர்ந்து நடிக்க முடிகிறது எனில், அதற்கு தன் கணவரது ஒத்துழைப்புதான் காரணம் என்று சொல்கிறார்.
"வாழ்க்கை சுவாரசியமாகப் போய்க்கொண்டிருக்கிறது. நல்ல கணவரும் புகுந்த வீடும் அமைந்துவிட்டால் கவலையே வேண்டாம். வீட்டில் இருக்கும்போது ஒப்பனை அறை பக்கமே போகமாட்டேன். வீட்டை துடைத்துக் கழுவி, அனைத்துப் பொருள்களையும் அவற்றுக்கான இடங்களில் அடுக்கி வைத்து அழகு பார்ப்பேன். ஆனால் சமையலறை பக்கம் மட்டும் என்னைப் பார்க்க முடியாது.
"20 ஆண்டுகால பயணத்தில் எதையெல்லாம் கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்கிறார்கள். தொழில்நுட்பம் குறித்து அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன்.
"அனைத்தையும் கடந்து இயக்குநராக வேண்டும் என்ற விருப்பம்தான் முதன்மையாக உள்ளது. கேமராவுக்குப் பின்னால் நின்றும் பணியாற்ற நான் தயார். எதிர்காலத்தில் என்னை இயக்குநராகப் பார்க்க வேண்டியிருந்தால் வியப்படைய வேண்டாம்," என்கிறார் பிரியாமணி.
திருமணத்துக்குப் பிறகு தமக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருவதாகக் குறிப்பிடுபவர், அவற்றுள் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்வதாகவும் ஊதியம் குறித்து தாம் அதிகம் கவலைப்படவில்லை என்றும் சொல்கிறார். ஓய்வு நேரங்களில் பேட்மின்டன் விளையாட்டில் கவனம் செலுத்துவாராம்.
பிரியாமணியின் பெற்றோர் இருவருமே விளையாட்டில் சாதித்தவர்கள்.
"என் அம்மா லதாவைப் பலருக்குத் தெரிந்திருக்கும். தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டியில் பங்கேற்றவர். அப்பா வாசுதேவ் மணியும் விளையாட்டு வீரர் தான். கேரள கிரிக்கெட் அணியில் இடம்பெற்றவர்.
"நானும்கூட மாவட்ட அளவில் பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று சாதித்திருக்கிறேன். ஆனால் சினிமா ஆசை வந்ததால் விளையாட்டை விடவேண்டியதாயிற்று," என்கி றார் பிரியாமணி.

