நல்ல கதைகள் இருந்தால் போதும், திரைப்படம், இணையத்தொடர், குறும்படம் என எதுவாக இருந்தாலும் நடிக்கத் தயார் என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
ஒரு பக்கம் வில்லனாக நடிப்பவர், திடீரென கதாநாயகனாகவும் நடிக்கிறார். இரண்டு தளங்களிலும் இவரது நடிப்பு பரவலாகப் பாராட்டுகளைப் பெறுகிறது.
தற்போது முதன்முறையாக 'வதந்தி' என்ற இணையத் தொடரில் நடித்து முடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. 'விக்ரம் வேதா' பட புகழ் இரட்டை இயக்குநர்களான புஷ்கர், காயத்ரி தயாரித்துள்ள இந்த இணையத் தொடரை 'கொலைகாரன்' பட இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார்.
இவர் ஏற்கெனவே 'வாலி', 'குஷி' ஆகிய படங்களில் எஸ்ஜே சூர்யாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இந்த இணையத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
கிட்டத்தட்ட 240 நாடுகளில் உள்ளவர்கள் இத் தொடரைப் பார்க்க முடியும் என்றும் அனைவரையும் கவரும் வகையில் இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
அண்மையில் நடைபெற்ற இந்தத் தொடரின் விளம்பர நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர், "தமிழகத்தைக் கடந்து, இந்தியாவையும் தாண்டி உலக அளவில் செல்லவேண்டும் என ஆசைப்பட்டேன். அது இந்த இணையத் தொடர் மூலமாக, அதுவும் எனது உதவி இயக்குநர் மூலமாகவே நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி," என்று குறிப்பிட்டார்.
தமது கடந்தகால சினிமா பயணத்தின்போது எதிர்கொண்ட சவால்கள், சோதனைகள் குறித்தும் பேசிய அவர், 2018ல் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து பணியாற்றியதையும் நினைவுகூர்ந்தார். அவர் நடித்த 'கள்வனின் காதலி' என்கிற படத்தை இயக்கிய தமிழ்வாணன்தான் அமிதாப் படத்தையும் இயக்கினார்.
தமிழில் 'உயர்ந்த மனிதன்' என்றும் இந்தியில் 'தேரா யார் ஹூன் மை' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. படத்துக்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்தேறின. எனினும் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
"அந்தக் காலக்கட்டத்தை என்னால் மறக்கவே இயலாது. அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது திரையுலகில் யாரும் சாதிக்க முடியாத ஒன்றை நான் சாதித்துவிட்டதாகக் கருதினேன். பத்து நாள்கள் அவருடன் இணைந்து படப்பிடிப்பிலும் நடித்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
"எனினும் நான் சும்மா இருக்கவில்லை. அந்தப் படத்தின் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்தேன். ஆனால் கடைசிவரை வெற்றி கிடைக்கவில்லை.
"அந்தப் படம் கைவிடப்பட்டதுபோது கதறி அழுதேன். உலக அளவில் செல்ல வேண்டும் என்கிற என்னுடைய கனவு நொறுங்கிப் போனது. ஆனால் தற்போது இந்த 'வதந்தி' இணையத் தொடர் மூலமாக அது கைகூடியுள்ளது," என்றார் எஸ்.ஜே.சூர்யா.
ஆண்ட்ரூ தமது திறமைகளை நன்கு வளர்த்துக்கொண்டுள்ளதாக வும் அவரது இயக்கத்தில் நடிப்பதைவிட அழகான அனுபவம் அமைந்துவிடாது என்றும் சூர்யா கூறுகிறார்.
"தாம் என்ன செய்கிறோம், தன் உடன் இருப்பவர்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், ஒரு தரமான படைப்பை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை ஆண்ட்ரூ நன்கு உணர்ந்துள்ளார்.
"இந்தத் தொடருக்கான வசனங்கள், காட்சி அமைப்புகள் குறித்து ஆண்ட்ரூ மிகவும் கவனமாக இருந்தார். எங்களுடைய நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான தனது எதிர்பார்ப்புகளை அவர் முன்கூட்டியே தெளிவாகச் சொல்லிவிட்டார்.
"அதனால் எனக்குள் ஒளிந்திருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவ்வப்போது வெளிப்பட்டார்," என்று சொல்லிச் சிரிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
, :
எஸ்.ஜே.சூர்யா

