"சில குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி குறிப்பிடும்போது 'குடிமகன்' என்று சொல்வார்கள். அவர்களுக்கு மேல் சாதிக்கு உதவி செய்யும் வேலைகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இதில் சிகையலங்காரம் செய்பவர்கள், துணி துவைத்துக் கொடுப்பவர்கள் என்று சிலர் அடங்குவர்.
"இவ்வாறு சாதிக் கொடுமைகளைப் பற்றி வெறுமனே மேம்போக்காக விவரித்துக் கொண்டிருக்காமல், நல்ல தீர்வையும் முன்வைத்துள்ளோம். எனது படத்தின் அடிப்படையே அதுதான்," என்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.
இவரது இயக்கத்தில் உருவாகி உள்ளது 'தமிழ்க் குடிமகன்' திரைப்படம். இயக்குநர் சேரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
"திருமணம், கொடுக்கல் வாங்கல், சேர்ந்து வாழ்வது, காதலிப்பது என அனைத்திலும் சாதிதான் குறுக்கே வந்து நிற்கிறது. சாதி இன்னும் நிலையாக இருக்கிறது. ஊருக்குள் இருக்கும் ஒவ்வொரு வருக்கும் சாதி அடையாளம் இருக்கிறது.
"நகர்ப்புறங்களில் சாதி வெளிப்படையாகத் தெரிவதில்லை. எனினும், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது தெரிந்துவிடும்.
"சாதி ஏற்றத்தாழ்வுகள்தான் இங்கே பகையின் பின்னணி. அதையும் எனது படத்தில் பதிவு செய்திருக்கிறேன். வெட்டுக்குத்து, கௌரவக் குறைச்சல் எல்லாம் தாழ்த்தப்பட்ட இடத்தில் திருமணம் செய்தால்தான் நடக்கிறது. இதை ஒழிக்க வேண்டும் அல்லவா. இதுகுறித்துப் பேசும் படம்தான் 'தமிழ்க் குடிமகன்'. நமது சமூகக் கட்டமைப்பின் அடித்தளத்தில் இருந்தே இது மாற வேண்டும். அதற்கான கதைக்களத்தில் இதுகுறித்துப் பேசி இருக்கிறேன்," என்கிறார் இசக்கி கார்வண்ணன்.
தனது கதையின் முக்கியமான கதாபாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை நடிக்க வைப்பதுதான் இவரது திட்டமாக இருந்துள்ளது. ஆனால் சமுத்திரக்கனியால் உரிய காலத்தில் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம்.
"கொஞ்சம் யோசித்துப் பார்த்ததில், இயக்குநர் சேரன் பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியது. அவரைப் போய்ப் பார்த்தேன். சில திருத்தங்களோடு இக்கதையை ஏற்றுக்கொண்டார்.
"உணர்வுபூர்வமான சினிமாவுக்காக களமிறங்கும் அனைத்து தகுதிகளும் சேரன் சாருக்கு உண்டு. ஆனால் அவரை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
"ஒவ்வொரு படம் இயக்கும்போதும் நடிக்கும்போதும் அது மக்களுக்கான விஷயமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். அவரை நான் பல்கலைக்கழகம் என்றுதான் சொல்வேன். அந்த அளவு அவர் அறிவாற்றல் உள்ளவர்," என்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.
விரைவில் திரைகாண உள்ள இப்படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

