இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகும் ‘ஃபால்’ என்ற இணையத்தொடரில் நடித்துள்ளார் அஞ்சலி.
பிற மொழிகளில் அதிக வாய்ப்புகள் தேடி வருவதால், தமிழில் புது வாய்ப்புகளை ஏற்க முடியவில்லை என்றும் இயக்குநர் ராமுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் திரையுலகம் சார்ந்த பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நான் திரைப்படங்களை இயக்க விருப்பம் கொண்டுள்ளதாக அண்மையில் வெளியான தகவல் உண்மையல்ல. நான் தொடர்ந்து நடிகையாக இருக்கவே விரும்புகிறேன். படத்தை இயக்குவதிலோ, தயாரிப்பதிலோ விருப்பம் இல்லை.
“இயக்குநர் ராம் சிறந்த ஆசிரியர் என்பேன். அவரது மாணவி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். அவருடன் பணியாற்றும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு விஷயத்தைக் கற்க முடியும்.
“புதிதாக நடிக்க வருபவர்கள் கொஞ்சம் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். கொஞ்சம் பலவீனமாக இருந்தாலும் தாக்குப்பிடிக்க இயலாது. நல்லதோ கெட்டதோ எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும்,” என்கிறார் அஞ்சலி.
காதல் என்பது அழகான ஓர் உணர்வு என்று குறிப்பிடுபவர், எத்தகைய காதல் என்பதைப் பொறுத்தே ஒருவரது மகிழ்ச்சி தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்.
திருமணம் குறித்து இப்போதைக்கு அஞ்சலி ஏதும் யோசிக்கவில்லையாம். காதலையும் திருமணத்தையும் மறைக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் அதுபோன்ற தகவல்களை நிச்சயம் வெளிப்படையாக அறிவிப்பதில் தயக்கம் ஏதுமில்லை என்றும் சொல்கிறார்.
“எந்த இயக்குநரின் படங்களில் நடிக்க வேண்டும், எந்த நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றெல்லாம் நான் யோசிப்பதே இல்லை.
“என்னைத் தேடி வரும் கதைகளில் எது சிறப்பாக இருப்பதாகக் கருதுகிறேனோ, அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.
“எனது திறமையை வெளிப்படுத்து வதற்கான வாய்ப்புகள் அமைந்தால் நிச்சயம் சாதிக்க முடியும். அதேசமயம் அத்தகைய வாய்ப்புகளைத் தேடிச் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை.
“அனைத்தும் இயல்பாக நடக்க வேண்டும்,” என்று சொல்லும் அஞ்சலி, தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
தமிழிலும் நல்ல கதைகளுக்காகக் காத்திருக்கிறார்.