‘நாடு’ படத்தில் நடித்தபோது பல்வேறு சுவாரசியமான, திகிலான, அச்சமூட்டும் அனுபவங்களைப் பெற்றதாகச் சொல்கிறார் நடிகை மகிமா நம்பியார்.
அதுமட்டுமல்ல, வனப்பகுதியில் கால்களைப் பதம்பார்க்கும் கூரான முட்கள் நிறைந்த இடங்களில் காட்சிகளை எடுத்தபோது மிகவும் சிரமப்பட்டு நடித்ததாகக் குறிப்பிடுகிறார்.
இப்படத்துக்கான முக்கிய காட்சிகளை தமிழகத்தில் உள்ள கொல்லி மலையில் படமாக்கி உள்ளனர். காலையில் நிலவும் குளிர், திடீரென சுட்டெரிக்கும் வெயில், இரவு வீசும் பனிக்காற்று என்று சூழ்நிலை சவால் நிறைந்ததாக இருந்தது என்கிறார் மகிமா.
“நான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கான ஒப்பனையைப் போட்டுக்கொள்ள சுமார் இரண்டரை மணி நேரமாகும். தினமும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் கண்விழித்து, ஒப்பனைக்குத் தயாராகிவிடுவேன்.
“கொல்லி மலைக்குச் சென்ற முதல்நாள், அங்கு நிலவும் காலநிலை மனதைக் கொள்ளைகொண்டது. குறிப்பாக, காலைப் பொழுது மிக ரம்மியமாக இருக்கும். குளிருக்கு மத்தியில் மெதுநடை மேற்கொண்டபோது, உற்சாகத்தின் உச்சிக்குச் சென்றேன்.
“எனினும் சில நாள்களுக்குப் பிறகுதான் பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின. படக்குழுவில் இருந்த பலருக்கு கடுங்குளிர் காரணமாக உடல் சருமம் உலர்ந்துவிட்டது. அதன் காரணமாக ஒப்பனை செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டன.
“இதனால் முகத்தில் ஆங்காங்கே வெடிப்புகள் இருப்பதுபோல் தோற்றமளித்தேன். இதை ஒளிப்பதிவாளர்தான் முதலில் கவனித்தார்.
“முகத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டும் என்பதால் படக்குழுவைச் சேர்ந்த பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர். அவை ஓரளவு கைகொடுத்தன. எனினும் ஒரு திடீர் விபத்தால் எனது முக அழகு பாதிப்புக்கு ஆளானது. அதனால் மிரண்டு போனேன்,” என்கிறார் மகிமா.
அப்படி என்ன நடந்துவிட்டது?
ஒருநாள் சிகையலங்காரம் செய்துகொண்டபோது, ஒப்பனையாளர் பயன்படுத்திய சிறிய ரக விசிறி (டிரையர்) போன்ற கருவியில் இருந்து வெளிப்பட்ட சூடான காற்று இவரது கன்னத்தைப் பதம் பார்த்துவிட்டதாம். தீக்காயத்தால் ஏற்பட்ட வடுபோல் காட்சியளித்ததால் முக அழகு பாதிக்கப்படும் எனக் கவலைகொண்டாராம்.
அதன் பிறகு சென்னையில் உள்ள தனது மருத்துவரைத் தொடர்புகொண்டு பேச, அவர் பரிந்துரைத்த மருந்துகளை வரவழைத்து சாப்பிட்ட பிறகுதான் எல்லாம் சரியானது என்கிறார்.
“இரு நாள்களுக்குப் பிறகு மருந்துகள் வந்து சேர்ந்தன. கன்னத்தில் ஏற்பட்ட காயம் ஆறிய பிறகுதான் மற்ற பணிகளில் கவனம் செலுத்த முடிந்தது.
“ஒரு நடிகைக்கு முக அழகும் புறத் தோற்றமும் எவ்வளவு முக்கியம் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால்தான் கவலைப்பட்டேன். அந்த வகையில் கொல்லிமலை அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது,” என்று சொல்லும் மகிமா, தமிழில் ‘நாடு’ போன்ற நல்ல கதைக்களம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பதாகச் சொல்கிறார்.
கதைக்காக உடலை வருத்திக்கொண்டு நடிப்பதில் தனக்கு தயக்கம் ஏதும் இல்லை என்று குறிப்பிடுபவர், சவாலான கதாபாத்திரங்கள்தான் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பெற்றுத் தரும் என்கிறார்.
“குறிப்பிட்ட ஒரு காட்சியில் குட்டைப் பாவாடையும் முகக்கண்ணாடியும் அணிந்து ஒய்யாரமாக (ஸ்டைலாக) நடந்து வரவேண்டும் என்று இயக்குநர் கூறினார். காட்டுப்பகுதியில் நான் அவ்வாறு நடந்து வரவேண்டிய இடத்தில் ஏராளமான முட்செடிகள் இருப்பதை அவர் முதலில் கவனிக்கவில்லை.
“ஓரடி எடுத்து வைப்பதற்குள் பத்து முட்செடிகள் என் கால்களில் உரசின. முள் கீறியதால் அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்க சிரமப்பட்டேன். எனினும் எதையும் வெளிக்காட்டாமல் அந்தக் காட்சியில் நடித்து முடித்தேன்.
“அதன் பிறகுதான் என்ன பிரச்சினை என்பதை இயக்குநர் தெரிந்துகொண்டார். ஒட்டுமொத்த படக்குழுவினரும் எனது செயலைக் கைதட்டிப் பாராட்டினர். அது பத்து விருதுகளுக்குச் சமமானது. ரசிகர்களின் ஆதரவும் பாராட்டுகளும் என்னை வழிநடத்துகின்றன,” என்கிறார் மகிமா நம்பியார்.
, :