தமிழ்நாட்டில் 'மாண்டஸ்' புயலைத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய ரசிகர்கள் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூற வருவார்கள். அவர்களை எப்படித் தடுத்தாலும் கேட்கமாட்டார்கள் என்பதால் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் பேரன்களோடு தங்கிவிட்டார் ரஜினி. ரசிகர்கள் மீது இருந்த அக்கறையால் தனது பிறந்தநாள் அன்று குடும்பத்
துடன் பிறந்தநாளைக் கொண்டாடாமல் மறுநாள் பேரப்பிள்ளைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதிகாலையில் இருந்தே அவர் வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களை, லதா ரஜினிகாந்த் நன்றி கூறி, திருப்பி அனுப்பினார். அவரது வீட்டு முன்பு கூடிய ரசிகர்கள் அவர் இல்லாத காரணத்தால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சிலர் கண்ணீருடன் சென்றனர்.
இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி. இது
தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இனிய நண்பரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், பொது மக்கள், ஊடக நண்பர்கள், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்கள், தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்
கிறேன்," என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தற்பொழுது நடித்து வரும் படம் 'ஜெயிலர்'. அவரது பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் நெல்சன், "இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்," என்று அறிவித்ததோடு ஒரு காணொளியையும் வெளியிட்டு இருந்தார்.
அந்தக் காணொளியில் வயதான தோற்றத்தில் காணப்படும் ரஜினி 'கோட்', 'சூட்', கண்ணாடி சகிதமாக உடலில் நறுமணம் வீசும் திரவியத்தை அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு பட்டாக் கத்தியை எடுப்பது போன்று வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
அவரின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ரஜினிகாந்த் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த 'பாபா' படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி, சில காட்சிகளைக் குறைத்து வெளியிட்டு இருந்தனர்.
இதற்கு ரஜினி ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். மேலும், இந்த 'பாபா' படத்தில் பல காட்சிகள் கத்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த படத்தில் ரஜினிக்கு 7 வரங்கள் கொடுக்கப்பட்டு அதை ஒவ்வொன்றாக பரிசோதித்து வருவார். ஆனால் இந்த 'டிஜிட்டல் பாபா'வில் ஐந்து வரங்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதனால் ரம்யா கிருஷ்ணன், ஜப்பான் பெண்ணுக்கு உதவி செய்ய ரஜினி உச்சரிக்கும் மந்தி
ரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. அதோடு இறுதிக் காட்சியில் பாபாவுக்கு மறு ஜென்மம் கொடுக்கப்படுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இதற்கிடையில் ரஜினி சென்னையில் வாய்ப்புத் தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஓர் உணவகத்தில் வேலை செய்த நாராயண ராவ் என்பவர் ரஜினியின் நிலையை அறிந்து அவர் கொடுக்கும் காசிற்கு அதிகமாகவே தினமும் உணவு கொடுப்பாராம்.
சில நேரங்களில் கையில் பணமில்லாதபோது, பணம் வாங்காமலேயே சாப்பாடு கொடுத்திருக்கிறார். இது பற்றி கடை உரிமையாளர் கேட்டபோது "என்னுடைய சம்பளத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்," என்று கூறியிருக்கிறார். இப்படியே பல நாள்கள் ரஜினிக்குச் சாப்பாடு போட்டு வந்திருக்கிறார் நாராயணராவ்.
பின்னர் ரஜினி திரையுலகில் முன்னணி நடிகரானார். சில
ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு உதவியாக இருந்த நாராயண ராவைத் தேடி, அவரது குடும்ப நிலையை விசாரித்துத் தெரிந்துகொண்ட ரஜினிகாந்த், அவரை நேரில் சென்று பார்த்து, அவர் பெயரில் பெரிய தொகை ஒன்றை வங்கியில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை குடும்ப செலவிற்கு கிடைக்கும்படி செய்திருக்கிறார்.
மேலும், அவரது மகனுக்குத் தனக்கு தெரிந்த தொழில்நுட்பக் கம்பெனியில் வேலையும் வாங்கிக் கொடுத்திருப்பதாகக் கூறப்
படுகிறது.

