வெற்றி, தோல்விகள் குறித்து தாம் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்கிறார் சந்தானம்.
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் நீடித்து வரும் அவர், தற்போது 'கிக்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியிருப்பதை வளர்ச்சியாகத்தான் பார்க்கிறாராம். ஒருபோதும் இந்த முடிவுக்காக தாம் வருத்தப்பட்டதில்லை என்றும் கூறுகிறார்.
"நான் இப்போது அதிக படங்களில் நடிக்கவில்லை என ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர். நகைச்சுவை நடிகராக இருந்தபோது எண்ணிக்கை அளவில் அதிக படங்களில் நடிக்க முடியும். கதாநாயகன் என்கிறபோது நமக்கான பொறுப்புகள் அதிகரிக்கின்றன. அதனால் ஆண்டுக்கு இரண்டு, மூன்று படங்களில் நடிப்பதே பெரிய விஷயம். ரசிகர்களுக்கும் இது தெரியும். எனினும், என் மீதுள்ள அன்பின் காரணமாக இவ்வாறு கூறுகின்றனர்," என்கிறார் சந்தானம்.
கதாநாயகனாக உயர்ந்த பிறகு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடிகிறது என்று குறிப்பிடுபவர், இப்போதுதான் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடிகிறது என்கிறார்.
"நகைச்சுவையைக் கைவிட்டு நாயகனாக உருவெடுத்ததில் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை. நகைச்சுவைக்காகப் பேசப்படும் சார்லி சாப்ளின், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற ஆளுமைகள் ஒரு காலகட்டத்தில் கதாநாயகனாக நடித்துள்ளனர். எனினும் அவர்களில் பலரால் அதே முடிவில் நீடிக்க இயலவில்லை. நான் தாக்குப்பிடிக்கிறேன், அவ்வளவுதான்.
தற்போது 'கிக்' படத்தில் நடித்து முடித்துள்ள சந்தானம், அடுத்து ஒரு திகில் படத்தில் நடிக்க உள்ளாராம். மேலும், ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.
"பள்ளியில் ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்புக்கு மாறுவது போன்று நான் நாயகனாக மாறியதை வளர்ச்சியாகத் தான் பார்க்கிறேன். எப்போதுமே கலகலப்பாக இருப்பதாகவும் திரை யில் தோன்றி அனைவரையும் சிரிக்க வைப்பதாகவும் சொல்கிறார்கள். எனக்கு மட்டுமே எப்படி இதற்கெல்லாம் சக்தி கிடைக்கிறது என்றும் கேட்கிறார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பதுதான் என்னிடம் உள்ள சக்தி. நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரையும் நம் மனதுக்கு நெருக்கமானவர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அதைச் செய்தால் எல்லோருடனும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
"நான் சந்திக்கும் எல்லோரையும் நண்பர்களாகப் பார்க்கிறேன். மற்றவர்கள் என்னை எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. இதுதான் என்னுடைய வெற்றி, சக்தியின் ரகசியம்," என்கிறார் சந்தானம்.
தமக்கும் சில கவலைகள் உள்ளதாகக் குறிப்பிடுபவர், அந்தக் கவலைகள் தம்மை வாட்டி வதைக்கும் அளவுக்கு மனதுக்குள் கொண்டு செல்வதில்லை என்கிறார். கடந்து போகும் மேகக்கூட்டங்களைப் போல், கவலைகள் தம்மைக் கடந்துபோக அனுமதிப்பதாகச் சொல்கிறார்.
தாம் நடிக்கும் படங்கள் நல்ல கருத்துகளை ஜாலியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என நினைக்கிறாராம். கவலைகளை மறந்து மனம்விட்டுச் சிரிக்கத்தான் பெரும்பாலான ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவதாகக் குறிப்பிடுபவர், அத்தகைய ரசிகர்களை உற்சாகப்படுத்த வேண்டிய பொறுப்பு திரையுலகத்தினருக்கு உள்ளது என்கிறார்.
"ஒரு கதாநாயகனாக இயக்குநர் கேட்கும் விஷயத்தைக் கொடுப்பதே எனக்கான பெரிய சவால். சில பகுதிகளை நகைச்சுவையாகச் செய்யுங்கள் என்று சொல்லும்போது அதற்கேற்ப நடிக்க வேண்டும். 'குலு குலு' படத்தில் ஒரு கதாநாயகனாக நான் கச்சிதமாகச் செயல்பட்டதாக நினைக்கிறேன்.
"ஒரு மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் கவலைகள் இல்லாமல் இருக்காது. அந்தக் கவலையை மறக்கச் செய்யும் அளவுக்கு ஜாலியாக கதை சொல்லி ரசிகர்களைச் சிரிக்க வைக்க வேண்டும். அதே சமயம் நாம் சொல்ல வேண்டிய கருத்தையும் தெரிவிக்க வேண்டும்," என்கிறார் சந்தானம்.
ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புது விஷயங்களைக் கையாள்வது, புதிய கோணத்தில் சிந்தித்து ரசிகர்களைச் சிரிக்க வைப்பது என யோசித்துச் செயல்படுவதாகச் சொல்கிறார்.
, :

