தாம் அஜித் குறித்து தவறாக ஏதும் பேசவில்லை என்றும் அவரைப் பற்றி தாம் கூறிய நல்ல விஷயங்களை ஊடகங்கள் மறைத்துவிட்டதாகவும் சொல்கிறார் 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளர் 'தில்' ராஜு.
இவர் அண்மைய பேட்டி ஒன்றில், தமிழ்த் திரையுலகின் முதல் நிலை நடிகர் என்றால் அது விஜய்தான் என்றும் அஜித்துக்கு இரண்டாம் இடம்தான் என்றும் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையாகி உள்ளது.
சமூக ஊடகங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 'வாரிசு', 'துணிவு' படங்கள் வெளியாகும்வரை இந்த விமர்சனங்களும் கருத்து மோதல்களும் நிற்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.
இந்நிலையில், தாம் தெரிவித்த கருத்துகள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
"ஒரு விளம்பர நிகழ்வில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நான் பேசினேன். குறிப்பாக அஜித், விஜய் ஆகிய இருவர் குறித்தும் பல்வேறு நல்ல விஷயங்களைக் குறிப்பிட்டேன்.
"ஆனால் நான் பேசியதில் இருபது விநாடிகள் மட்டுமே கொண்ட சிறு காணொளிப் பகுதியை மட்டும் வெட்டி எடுத்துத் தனியாக வெளியிட்டுள்ளனர்.
"இதன் மூலம் சமூக ஊடகங்களில் 'வாரிசு' படத்துக்கு எதிராக சிலர் செயல்பட்டு வருகின்றனர். எனது முழுப் பேச்சையும் கவனித்தால்தான் நான் சொல்வது எவ்வளவு உண்மை என்பது தெரியவரும்," என்கிறார் தில் ராஜு.
இதற்கிடையே 'துணிவு', 'வாரிசு' படங்களுக்கு தமிழகத்தில் சம அளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு படத்தின் வெற்றியை நடிகர்கள் மட்டுமே தீர்மானிப்பதில்லை என்றும் நல்ல கதைதான் வெற்றியை உறுதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'வாரிசு' திரைப்படத்தை தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த தில் ராஜுவும் 'துணிவு' திரைப்படத்தை இந்தித் தயாரிப்பாளர் போனி கபூரும் தயாரித்துள்ளனர்.
'துணிவு' திரைப்படத்தை தமிழகத்தில் (ரெட் ஜெயண்ட் மூவீஸ்) உதயநிதி ஸ்டாலினும் 'வாரிசு' திரைப்படத்தை (செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ) லலித் குமாரும் வெளியிடுகின்றனர். மற்ற நாடுகளில் வெவ்வேறு நிறுவனங்கள் வெளி யீட்டு உரிமையைப் பெற்றுள்ளன.
எனவே இவ்விரு நிறுவனங்களும் கலந்து பேசி, இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வாய்ப்புள்ளதாக கோடம்பாக்கப் பிரமுகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கிடையே, அஜித்தும் விஜய்யும் தங்கள் ரசிகர்கள் இடையே எந்தவித மோதலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும் அவர்களது தரப்பில் கூறப்படுகிறது.

